ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தவறுதலாக ஆயுத குவியலை போட்ட அமெரிக்கா!
வாஷிங்டன்: ஈராக்கின் குர்து படையினருக்கு வான்வழியே போடப்பட்ட ஆயுதங்கள் தவறுதலாக ஐ.எஸ். தீவிரவாதிகள் கைகளில் சிக்கியிருக்கிறது. இதை அமெரிக்காவும் உறுதிப்படுத்தியுள்ளது.
ஈராக், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் நிலைகள் மீது அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் தொடர்ந்து வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றனர். அத்துடன் குர்திஸ்தான் அரசு படையினருக்கு பெருமளவு ஆயுதங்களை வழங்கி அவர்களையும் ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக களத்தில் இறக்கிவிட்டுள்ளது அமெரிக்கா.
இந்த நிலையில் அமெரிக்காவின் ஆயுதங்கள் சில தங்கள் வசம் சிக்கியுள்ளதாக வீடியோ காட்சி ஒன்றை ஆதாரமாக முன்வைத்து ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டிருந்தனர். இதனை தற்போது அமெரிக்காவும் உறுதிப்படுத்தியுள்ளது.
கோபென் நகரில் குர்து படையினருக்கு ஆயுதங்களை வான்வழியாக விநியோகித்த போது ஒரு பெட்டி ஆயுதங்கள் பாரசூட் காற்றின் திசையில் ஐ.எஸ். தீவிரவாதிகள் பகுதியில் விழுந்துவிட்டது. இதை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.
அதில் கையெறி குண்டுகள், வெடிமருந்துகள், மருத்துவ உபகரணங்கள் மட்டுமே இருப்பதாகவும் இதனால் தீவிரவாதிகளுக்கு பெரிய அளவில் பலனிருக்காது என்றும் அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
இருப்பினும் இதை துருக்கி கடுமையாக விமர்சித்துள்ளது. தீவிரவாதிகளின் கைகளுக்கு இப்படி ஆயுதங்கள் கிடைப்பது அவர்களை பலப்படுத்தவே செய்யும் என்று துருக்கி கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications