சீனாவை விட மூன்றில் ஒரு பங்கு நிதியை மட்டுமே பாதுகாப்புக்கு செலவிடும் இந்தியா
வாஷிங்டன்: சீனா தனது பாதுகாப்புக்கு செலவிடும் தொகையில் மூன்றில் ஒரு பங்கைத்தான் இந்தியா செலவிடுவதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. உடனடியாக சீனா இத்தகவலை மறுத்துள்ளதுடன், அண்டை நாடுகளுடன் சுமுகமாக செல்லவே சீனா விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது.

பென்டகன் அறிக்கையில் அம்பலம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் அந்த நாட்டு ராணுவ தலைமையகம் பென்டகன் ஆண்டுதோறும் பிற நாடுகளின் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வறிக்கை தாக்கல் செய்வது வழக்கம். இந்தாண்டுக்கான அறிக்கையை பென்டகன் நேற்று அமெரிக்க காங்கிரசில் தாக்கல் செய்தது. அது தாக்கல் செய்த அறிக்கையில் ஆசிய நாடுகளின் ராணுவ செலவீனங்கள் தொடர்பான தகவல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா கொஞ்சம்தான்
பென்டகன் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ செலவீனம் பற்றிய தகவல்கள் உள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: "சீனா 2013ம் ஆண்டு பாதுகாப்பு திட்டங்களுக்காக 119.5 பில்லியன் டாலர்களை அதாவது, இந்திய மதிப்பில் ரூ.7 லட்சம் கோடியை ஒதுக்கியிருந்தது. ஆனால் அதே ஆண்டு இந்தியா 39.2 பில்லியன் டாலர்களை அதாவது, ரூ.2.32 லட்சம் கோடிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது.

ரஷ்யாவும் பரவாயில்லை
ரஷ்ய நாடு 2013ம் ஆண்டு பாதுகாப்புத்துறை திட்டத்துக்கு 69.5 பில்லியன் டாலர்களையும், ஜப்பான் 56.9 பில்லியன் டாலர்களையும், தென்கொரியா 41.8 மில்லியன் டாலர்களையும் ஒதுக்கியிருந்தன.

இந்திய-சீன எல்லையில் பதற்றம்
இந்தியா மற்றும் சீன நாடுகளுக்கு இடையே அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் மேம்பட்டுள்ளபோதிலும், இரு நாடுகளுக்கிடையே அருணாச்சல பிரதேசத்திலுள்ள நாலாயிரத்து 57 கிலோமீட்டர் தொலை உள்ள எல்லை பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது.

சீனா அவசர மறுப்பு
அருணாச்சல பிரதேசத்தை திபெத்தின் ஒரு பகுதி என்று சீனா கூறி வருகிறது. இருப்பினும் சீனாவைவிட இந்தியா, தனது பாதுகாப்புக்கு குறைந்த அளவு நிதியையே ஒதுக்கியுள்ளது" என்று பென்டகன் தனது அறிக்கையில் கூறியுள்ளது. அதே நேரம் அமெரிக்காவின் அறிக்கை அம்சங்களை சீனா மறுத்துள்ளது. அண்டை நாடுகளுடன் சீனா பதற்றத்தை ஏற்படுத்திவருதுபோன்ற தோற்றத்தை இந்த அறிக்கை அளிப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

இரும்புத் திரை நாடு
சீனாவின் நடவடிக்கைகள் குறிப்பாக, ராணுவரீதியிலான நடவடிக்கைகள் பிற நாடுகளுக்கு தெரியாமல் மேற்கொள்ளப்படுவதால் அது இரும்புத் திரை நாடு என்று வர்ணிக்கப்படுகிறது. இருப்பினும் அமெரிக்கா எப்படியோ அதை கண்ட்டுபிடித்து அறிக்கை தாக்கல் செய்துவிட்டது.












Click it and Unblock the Notifications