இலங்கை போர்க் குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை அவசியம்: நவி பிள்ளை வலியுறுத்தல்
ஜெனிவா: இலங்கையில் 2009-ஆம் ஆண்டு நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை வலியுறுத்தி உள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் நவநீதம் பிள்ளை, 74 பக்கங்கள் கொண்ட அறிக்கையை ஐ.நா. தலைமையகத்துக்கு அனுப்பியுள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது நிகழ்ந்த சர்வதேச மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமானச் சட்ட மீறல்கள் தொடர்பாக ஐ.நா. சர்வதேச அளவிலான விசாரணை நடத்த வேண்டும். இது தொடர்பாக இலங்கை அரசு நடத்தி வரும் உள்நாட்டு விசாரணையையும் கண்காணிக்க வேண்டும்.

தீவிரவாத தடுப்புச்சட்டம்
இலங்கையில் தீவிரவாத தடுப்புச் சட்டம் என்ற பெயரில் அப்பாவித் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதைத் தடுக்க அச்சட்டத்தை வாபஸ் பெறச் செய்ய வேண்டும்.
சிறுபான்மையினர் தாக்குதல்
காணாமல் போனவர்களைப் பற்றியும், தேடப்பட்டு வரும் குற்றவாளிகள் எனக் கூறப்படுபவர்கள் பற்றியும், சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்று நவநீதம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
1 லட்சம் தமிழர்கள்
இலங்கையில் 1972 முதல் 2009-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நடைபெற்ற மோதலில் சுமார் ஒரு லட்சம் பேர் உயிரிழந்து விட்டதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இலங்கை மறுப்பு
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம்; அவர்களில் பலர் அரசுத் துருப்புகளால் துன்புறுத்தப்பட்டுள்ளனர் என்று ஐ.நா. ஏற்கெனவே கூறியிருந்தது. இதை இலங்கை அரசு மறுத்து வருகிறது.
அமெரிக்கா தீர்மானம்
இந்நிலையில், அடுத்த மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், சர்வதேச மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா 3-வது தீர்மானத்தை கொண்டு வரவுள்ளது.
இலங்கை அச்சம்
ஏற்கெனவே, இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த இரண்டு தீர்மானங்களுக்கும் ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. எனினும், இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பாக அமெரிக்கா கொண்டு வரும் 3-வது தீர்மானத்தின் மூலம், தங்களுக்கு எதிராக தன்னிச்சையான சர்வதேச விசாரணை கொண்டு வரப்படலாம் என்று இலங்கை அரசு அஞ்சுகிறது.
சர்வதேச விசாரணை
இதனிடையே, மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை நடத்தி வரும் உள்நாட்டு விசாரணை தோல்வியடையும் பட்சத்தில், சர்வதேச அளவிலான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பிரிட்டனும் வலியுறுத்தி உள்ளது.
கூடுதல் அவகாசம்
இதையடுத்து, இலங்கையில் சிறுபான்மையினரான தமிழர்களுக்கும், பெரும்பான்மையினரான சிங்களவர்களுக்கும் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இன்னும் கூடுதல் அவகாசம் வழங்குமாறு அமெரிக்காவிடம் இலங்கை அரசு கோரி வருகிறது.












Click it and Unblock the Notifications