மனைவியுடன் சண்டை... தானும் செத்து, விமானத்தையும் விபத்துக்குள்ளாக்க திட்டமிட்ட பைலட்!
ரோம்: இத்தாலியில் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விமானி ஒருவர் தானும் தற்கொலை செய்து கொண்டு, பயணிகள் விமானத்தையும் விபத்தில் சிக்க வைக்க திட்டமிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இத்தாலியில் உள்ள விமான நிறுவனம் ஒன்றில் விமானியாக பணி புரிந்து வருபவர் சம்பந்தப்பட்ட அந்த விமானி. 40 வயதான அவருக்கும், அவரது மனைவிக்கும் சம்பவத்தன்று பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

அப்போது கணவரை விட்டு பிரிந்து செல்ல இருப்பதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். இதனால் மன உளைச்சலுடன் அவர் பணிக்குச் சென்றுள்ளார். விமானம் புறப்பட சில நிமிடங்களே இருந்த நிலையில், அந்த விமானி தனது மனைவிக்கு எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ‘என்னை விட்டு நீ பிரிந்து சென்றால், நான் தற்கொலை செய்து கொள்வேன். இந்த விமானத்தையும் விபத்தில் சிக்க வைத்து, பயணிகள் அனைவரையும் கொல்வேன்' எனத் தெரிவித்துள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பெண், உடனடியாக இது குறித்து விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக அவர்களும் பயணிகளுக்கு தெரியாமல் அந்த விமானியை மாற்றியுள்ளனர்.
பின்னர் விமானம் ரோமிலிருந்து புறப்பட்டு ஜப்பானுக்குச் சென்றுள்ளது. அந்த விமானத்தில் 200 பயணிகள் இருந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த இந்தச் சம்பவம் தற்போது தான் வெளியில் தெரிய வந்துள்ளது. தற்போது அந்த விமானி மன நல சிகிச்சைப் பெற்று வருகிறாராம்.
இந்த சம்பவத்திற்கு 2 மாதங்களுக்கு முன்புதான் ஜெர்மனியைச் சேர்ந்த ஆண்டிரியஸ் லூபிட்ஸ் என்ற விமானி, ஆல்ப்ஸ் மலையில் ஜெர்மன்விங்ஸ் விமானத்தை வேண்டுமென்றே மோதி விபத்துக்குள்ளாக்கினார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications