2 சிறுநீரகமும் செயல் இழந்த தமிழரை ரியாத்தில் இருந்து ஊருக்கு அனுப்ப உதவி செய்யுங்களேன்!
ரியாத்: ரியாத்தில் இரண்டு சிறுநீரகமும் செயலலிழந்து வாடும் தமிழரை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க உதவி செய்யுமாறு ரியாத் தமிழ்ச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
தென்காசி தாலுகாவில் உள்ள தன்போத்தை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் காசிம் ராவுத்தர் முகம்மது சலீம். அவர் ரியாத்தில் வேலை செய்து வந்தார். அவருடைய பாஸ்போர்ட் எண் E 9003425613. அவர் தன்னை வேலைக்கு எடுத்த கபீலிடம் இருந்து ரிலீஸ் வாங்கிவிட்டு வேறு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். ஆனால் அவர் சேர்ந்த நிறுவனத்தில் அவரின் தனாசில் வேலைகள்(வெளி வேலை செய்ய அனுமதி) உடனடியாக முடியாமல் தாமதமானதால் அவரின் கபீல் அவர் என்னை விட்டும் ஓடிவிட்டார் என்று ஹீருப் கொடுத்துவிட்டார்.
இந்நிலையில் காசிமின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரின் இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழக்கத் துவங்கியுள்ளதாக தெரிவித்தனர். கபீலிடம் பேசி அவரை எப்படியாவது ஊருக்கு அனுப்பிவிடலாம் என்றிருந்த நிலையில் அவர் ஒருநாள் மயக்கமடைந்து
கீழே விழுந்துவிட்டார்.
இதையடுத்து அவர் மன்னர் சல்மான் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரின் சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டதாக தெரிவித்து டயாலிசிஸ் அளித்து வருகின்றனர். அதற்கு பெரும் தொகையான செலவுகள் வந்த நிலையில் ரியாத் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்த ஜமால் சேட் அந்த மருத்துவமனையின் டைரக்டரிம் பேசி எப்படியாவது ஊருக்கு உடன் அனுப்பிவிடுகிறேன் என்றும், அதுவரை மருத்துவம் பாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார். இன்னும் ஒருவாரத்திற்குள் அனுப்பிவிடும்படி கெடு கொடுத்துள்ளார்கள்.
அவரை வீல்சேரில் வைத்து அனுப்புவதற்கும், ஹீரூப் நீக்கி தாயகம் அனுப்பிவைப்பதற்கும் 6 முதல் 8 ஆயிரம் ரியால்வரை செலவாகலாம். அவருக்கு உதவ விருப்பமுள்ளவர்கள் ஜமால் சேட்டை 0507863307 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.