ஜப்பானில் மோடி... பண்டைய கால புத்த கோவில் ‘தோஜி’யைப் பார்வையிட்டார்
டோக்கியோ: ஜப்பானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை அங்குள்ள பண்டைய கால புத்த கோவிலுக்கு சென்றார்.
இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவதற்காக ஜப்பானில் 5 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. நேற்று காலை 6 மணிக்கு டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டு சென்ற மோடியுடன், உயர்மட்டக்குழு ஒன்றும் சென்றுள்ளது.
ஒசாகா அருகில் உள்ள கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் சென்றிறங்கிய மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்காக ஒரு சிறப்பு நிகழ்வாக ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே, டோக்கியோவிலிருந்து கியோட்டோ சென்றிருந்தார்.
இந்தச் சந்திப்பின் போது இந்திய நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவது குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். இதில் முதல்கட்டமாக வாரணாசியை கலாச்சார நகரமாக மாற்றா ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், இன்று தனது இரண்டாவது நாள் சுற்றுப் பயணத்தை தோஜி கோவிலுக்கு சென்று தொடங்கியுள்ளார். பிரபலமான பண்டைய கால புத்த கோவிலுக்கு பிரதமர் நரேந்திர மோடியுடன், அந்நாட்டு பிரதமர் ஷின்ஜோவும் உடன் சென்று இருந்தார்.

தோஜி கோவில்...
யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ள தோஜி கோவில் வளாகத்தை சுமார் அரை மணி நேரம் பார்வையிட்ட பிரதமர் மோடி, 8ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அக்கோவில் வரலாறு குறித்து விசாரித்து அறிந்தார்.

கோபுர தரிசனம்...
பிரதமர் நரேந்திர மோடியை கோவிலின் தலைமை துறவி மோரி, கோவில் கோபுரத்திற்கும் அழைத்து சென்று காட்டினார்.

பெருமை... மகிழ்ச்சி
மோடியின் வருகை குறித்து அவருடன் சென்ற துறவி ஹாசி கூறுகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி எங்களுடன் வந்ததில் மிகவும், மகிழ்ச்சியாக உள்ளது. இது எங்களது கோவிலுக்கு பெருமை. மோடி பெரிய மனம் கொண்டவர்' எனத் தெரிவித்தார்.

ஜப்பான் வாழ் இந்தியர்கள்...
பிரதமர் மோடியின் வருகை குறித்து அறிந்த அப்பகுதியில் வாழ்ந்து வரும் இந்தியர்கள் கையில் இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு அவரைப் பார்க்க குவிந்தனர். மோடியும் அவர்களைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.












Click it and Unblock the Notifications