ரஷ்ய பயணம் நிறைவு.. ஆஸ்திரியா சென்ற பிரதமர் மோடிக்கு கிடைத்த உற்சாக வரவேற்பு!
மாஸ்கோ: ரஷ்ய பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, ஆஸ்திரியா சென்றார். தனி விமானம் மூலம் ஆஸ்திரியாவின் வியன்னா சென்ற பிரதமர் மோடிக்கு அந்த நாட்டில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியாவும், ரஷியாவும் நீண்ட காலமாக நல்லுறவவை பேணி வருகின்றன. இரு நாடுகளுக்கு இடையே உச்சி மாநாடும் அவ்வபோது நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 22-வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாடு ரஷ்யாவில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்தார்.

அதை ஏற்று 2 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று முன்தினம் ரஷ்யா சென்றார். மாஸ்கோவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.பின்னர் மாலையில் அதிபர் புதின் இல்லத்தில் அவரை சந்தித்தார். மாஸ்கோவின் புறநகர் பகுதியான நோவோ - ஒகாரியோவோவில் உள்ள வீட்டில் இந்த சந்திப்பு நடந்தது. இதைத்தொடர்ந்து நேற்று இரு நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு நடந்தது.
இதில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவர்கள் விவாதித்தனர். முக்கியமாக ராணுவம், வர்த்தகம், முதலீட்டு உறவு, எரிசக்தி ஒத்துழைப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி, கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மறுஆய்வு செய்தனர்.
பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். பின்னர் அக்டோபர் மாதம் ரஷ்யாவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டுக்கும் வருமாறு பிரதமர் மோடிக்கு புதின் அழைப்பு விடுத்தார். அதைத்தொடர்ந்து, பிரதமர் மோடிக்கு ரஷ்யாவின் உயரிய செயின்ட் ஆண்ட்ரூ விருது வழங்கப்பட்டது. இந்த விருதை ரஷ்ய அதிபர் புதின் வழங்கி கவுரவித்தார்.
இதைத்தொடர்ந்து ரஷ்யாவில் 2 நாட்கள் பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி மாலையில் ஆஸ்திரியா புறப்பட்டு சென்றார். தனி விமானம் மூலம் ஆஸ்திரியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆஸ்திரியா அதிபர் அலெக்சாண்டர் வான்டர் பெல்லன் மற்றும் பிரதமர் கார்ல் நெகம்மரை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.












Click it and Unblock the Notifications