பாகிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்தடைந்தார் பிரதமர் மோடி !
லாகூர்: ரஷ்யா, ஆப்கானிஸ்தான் பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பும் வழியில் திடீரென யாரும் எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் சென்ற பிரதமர் மோடி, பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்தடைந்தார்.
ரஷ்யா, ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி தனது பயணத்தை முடித்து நாடு திரும்பும் வழியில் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

லாகூர் விமான நிலையம் சென்ற பிரதமர் மோடியை, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விமான நிலையத்திற்கு நேரில் வந்து கட்டித்தழுவி வரவேற்றார். இரு தலைவர்களும் சில நிமிடங்கள் சிரித்து பேசியவாறே நடந்து சென்றனர். தொடர்ந்து பாகிஸ்தானின் உயர்மட்ட அதிகாரிகளை நவாஸ் ஷெரீப் அறிமுகம் செய்து வைத்தார்.
இதையடுத்து ராவல்பிண்டி ஜதி உம்ரா பகுதியில் உள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இல்லத்திற்கு பிரதமர் மோடி புறப்பட்டார். அங்கு இரு தலைவர்களும் சுமார் 90 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பிரதமர் மோடியுடன் 120 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவும் சென்றது.
இந்த பேச்சுவார்த்தையின் போது இருநாட்டு எல்லைப் பிரச்சினை, இந்தியா, பாகிஸ்தான் உறவுமுறை குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இருநாட்டு உறவுகள் குறித்து தொடர்ந்து பேச்சு நடத்த இருநாட்டு பிரதமர்களும் விருப்பம் தெரிவித்ததாக பாகிஸ்தான் வெளியுறவுதுறை செயலர் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைக்கு பின்னர் நவாஸ் ஷெரீப் இல்லத்தில் இருந்து புறப்பட்ட மோடி ஹெலிகாப்டர் மூலம் லாகூர் விமான நிலையம் வந்தார். அங்கிருந்து தனி விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தார். விமான நிலையத்தில் வெளி்யுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வரவேற்றார்.
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பு பிறந்தநாள் விழா மற்றும் அவரது பேத்தி திருமண விழா நிகழ்ச்சியிலும் மோடி கலந்துகொண்டார். பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மோடி பாகிஸ்தான் செல்வது இதுதான் முதல் முறையாகும். பிரதமர் மோடியின் இந்த திடீர் பாகிஸ்தான் பயணம் உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications