இந்தியாவுடன் மோதல்.. கனடாவின் ஜி 7 உச்சி மாநாட்டை முதல் முறையாக புறக்கணிக்கும் மோடி.. என்ன காரணம்?
ஒட்டாவா: ஜி - 7 நாடுகளின் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை இந்த முறை கனடா தலைமையேற்று நடத்துகிறது. ஜூன் 15 முதல் 17 வரை நடைபெற உள்ள மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
உலக நாடுகள் இடையே பல கூட்டமைப்புகள் உள்ளன. வர்த்தகம், பாதுகாப்பு சார்ந்து ஒவ்வொரு நாடுகளும் பிற நாடுகளுடன் சேர்ந்து செயல்பட்டு வருகின்றன. இதனை இன்னும் பலப்படுத்தும் வகையில் பல நாடுகள் இணைந்து கூட்டமைப்புகளை உருவாக்கி உள்ளன.

அதில் ஒரு முக்கியமான கூட்டமைப்பு தான் ஜி 7. இந்த ஜி 7 கூட்டமைப்பில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கனடா ஆகிய ஏழு நாடுகள் இடம்பெற்றுள்ளன. இதில் நம் நாடு இடம்பெறவில்லை.
ஒவ்வொரு ஆண்டும் ஜி 7 மாநாட்டை கூட்டமைப்பில் உள்ள நாடு தலைமையேற்று நடத்தி வருகிறது. இந்த சமயத்தில் கூட்டமைப்பில் இல்லாத நாடுகளின் தலைவர்களுக்கு மாநாட்டை ஏற்று நடத்தும் நாடுகள் அழைப்பு விடுக்கும். அந்த வகையில் கடந்த 6 ஆண்டுகளாக பிரதமர் மோடி ஜி 7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று வந்தார்.
இந்த முறை ஜி 7 மாநாட்டை கனடா தலைமையேற்று நடத்துகிறது. கனடாவில் வரும் 15ம்தேதி முதல் 17 ம் தேதி வரை 3 நாள் ஜி 7 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் ஜி 7 நாடுகளை தவிர ஆஸ்திரேலியா, உக்ரைன், தென்ஆப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது. மாநாட்டில் பங்கேற்கும்படி, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அழைப்பு வந்தாலும் கனடாவுக்கு பயணம் செய்வதற்கு மோடி தயாராக இல்லை என்று சொல்லப்படுகிறது.
அதன்படி 6 ஆண்டுகளுக்குப் பின், முதல் முறையாக ஜி - 7 மாநாட்டில் மோடி பங்கேற்கமாட்டார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பாகும். கனடா காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமடைந்தது.
இதற்கு கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா மீது முன்வைத்த குற்றச்சாட்டுகள் தான் காரணமாகும். அதாவது கனடாவின் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்தியா உள்ளதாக ஜஸ்டின் ட்ரூடோ குற்றம்சாட்டினார். இதனை நம் நாடு முற்றிலுமாக மறுத்தது. ஆனாலும் ஜஸ்டின் ட்ரூடோ தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். இதனால் இருநாடுகள் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இந்த விரிசல் தற்போது வரை சரியாகவில்லை. கனடாவில் ஏராளமான சீக்கியர்கள் உள்ளனர். இதில் ஒருதரப்பினர் காலிஸ்தான் ஆதரவாளர்களாக உள்ளனர். இதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாகவும் கனடா செல்ல மோடி தயாராக இல்லை என கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications