தஜிகிஸ்தான் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு- அய்னி விமானப்படை தளம் குத்தகை தொடர்பாக பேச்சுவார்த்தை!
துஷன்பே: பிரதமர் நரேந்திர மோடி தமது 6 நாடுகள் சுற்றுப்பயணத்தின் இறுதிகட்டமாக இன்று தஜிகிஸ்தான் அதிபர் எமோமலியை சந்தித்து பேசினார். இச்சந்திப்பின் போது அந்நாட்டின் அய்னி விமானப் படை தளத்தை குத்தகைக்கு எடுப்பது தொடர்பாக பிரதமர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் ரஷ்யா பயணத்தை முடித்துக்கொண்டு துர்க்மேனிஸ்தான் சென்றார். அங்கு அவர் அந்நாட்டின் அதிபர் குர்பாங்குலியை சந்தித்து பேசினார். அதைத் தொடர்ந்து இரு நாடுகள் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இப் பயணத்தை முடித்துக்கொண்டு கிர்கிஸ்தான் நாட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். அவரை தலைநகர் பிஷ்கேக் விமான நிலையத்துக்கு அந்த நாட்டின் பிரதமர் டெமிர் சர்யெவ் நேரில் வரவேற்றார்.

கிர்கிஸ்தானுடன் கூட்டு பயிற்சி
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி, நேற்று அந்த நாட்டின் அதிபர் அல்மாஸ்பெக்கை சந்தித்து பேசினார். இச்சந்திப்புகளின் போது ஆண்டுதோறும் இரு தரப்பு கூட்டு ராணுவ பயிற்சி மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

காந்தி சிலை திறப்பு
மேலும் கிர்கிஸ்தான் அதிபருடன் பிரதமர் மோடி நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே, ராணுவம், கலாசாரம் உள்ளிட்ட துறைகளில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பிஷ்கேக் நகரில், மகாத்மா காந்தியின் பெயரைத்தாங்கிய வீதியில், அவரது உருவச்சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

மருத்துவ உபகரணங்கள்..
மேலும் அந்நாட்டு ராணுவ மருத்துவமனைக்கு மருத்துவ உபகரணங்களை வழங்கி அவற்றையும் பிரதமர் மோடி பார்வையிட்டார்.

தஜிகிஸ்தானில்..
கிர்கிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு மத்திய ஆசிய நாடுகள் பயணத்தின் இறுதிக்கட்டமாக பிரதமர் மோடி தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேவுக்கு நேற்று சென்றார். அங்கு அவர் அந்த நாட்டின் அதிபர் எமோமலியை இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
|
அய்னி விமான தளம்
இப்பேச்சுவார்த்தையின் போது துஷான்பே அருகில் உள்ள அய்னி விமான தளத்தை இந்திய விமானப்படையின் உபயோகத்துக்காக குத்தகைக்கு எடுப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்த விமானதளம் முந்தைய சோவியத் ரஷ்யா காலத்தில் உருவாக்கப்பட்டு 2007-ம் ஆண்டு இந்தியாவால் மறு உருவாக்கம் செய்து கொடுக்கப்பட்டதாகும்.












Click it and Unblock the Notifications