“நீங்கள் சிந்திய வியர்வைதான் என்னை இங்கு கூட்டி வந்துள்ளது”.. சவுதியில் நெகிழ்ந்த மோடி
ரியாத்: சவுதி சுற்றுப்பயணத்தின் போது, அங்குள்ள இந்திய பணியாட்களுடன் அமர்ந்து மோடி சாப்பிட்ட படம் இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
இரண்டு நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்தார் பிரதமர் மோடி. அப்போது, ரியாத்தில் இந்தியப் பணியாட்களைச் சந்தித்த மோடி, அவர்களுடன் சேர்ந்து அமர்ந்து சாப்பாடும் சாப்பிட்டார்.
இந்த சந்திப்பின் போது, இந்திய பணியாட்கள் மத்தியில் பேசிய மோடி, "உங்களுடைய வியர்வையும் உழைப்பும் தான் என்னை இங்குக் கூட்டி வந்திருக்கின்றது. உங்களுடைய சந்தோஷமே என்னுடைய சந்தோஷமும். நீங்கள் மகிழ்ச்சியாக இல்லை என்றால் நானும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது" என்றார்.
|
எல் அண்ட் டி ஊழியர்கள்...
எல் அண்ட் டி நிறுவன ஊழியர்களின் குடியிருப்புக்கே சென்று, அங்கிருந்தவர்கள் மத்தியில் பேசிய மோடி, அங்கிருந்தவர்களிடம் நரேந்திர மோடி செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும் வலியுறுத்தினார்.

மோடி செயலி...
மேலும், இந்த செயலியை பதிவிறக்கம் செய்து கொள்வதன் மூலம் தான் மக்களின் சட்டைப் பாக்கெட்டிலேயே இருப்பேன் என்றும் அவர் தெரிவித்தார்.

வியர்வைத் துளிகள்...
சுமார் 17 நிமிடங்கள் அங்கு பேசிய மோடி, "உங்களுடைய வியர்வைத் துளிகள் தான் இந்தியாவின் மதிப்பு. வருங்காலத்தில், இந்தியாவில் இருந்த இளைஞர்கள் தான் இந்த மெட்ரோவைக் கட்டி முடித்தார்கள் என்று மக்கள் சொல்வார்கள். உங்கள் குடும்பங்கள் அனுப்பும் கடிதங்களை நான் படிப்பேன். அதில் நல்ல செய்தி இருந்தால் என் மனம் குளிரும். அப்படி கேட்ட செய்தியாக இருந்தால் வாடி விடும்.

பெருமை...
இந்நேரத்தில் சவுதியின் அரசரான சல்மான், ஒவ்வொரு முறை இந்தியாவைப் புகழ்ந்து பேசும் போதும் நான் பெருமையாக நெஞ்சம் நிமிர்த்தி நடப்பேன். உங்களால் இந்தியாவிற்கு பெருமை சேர்ந்ததோடு, இந்திய இளைஞர்களுக்கு வாய்ப்பும் ஏற்படுத்தப் பட்டுள்ளது" எனப் பாராட்டினார்.

வைரல்...
சமூகவலைதளங்களில் இது தொடர்பான புகைப்படங்களையும் அவர் பதிவேற்றம் செய்துள்ளார். அதில், இந்தியத் தொழிலாளர்களுடன் அமர்ந்து மோடி சாப்பிடும் புகைப்படம் இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications