மறைந்த போப்பாண்டவர் 2ம் ஜான் பாலின் " இருண்ட" பக்கம்... பரபரப்பைக் கிளப்பும் பிபிசி டாக்குமென்டரி!
வாடிகன் சிட்டி: மறைந்த போப்பாண்டவர் 2ம் ஜான் பாலுக்கும், போலந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே ரகசிய உறவு இருந்ததாகவும், இருவரும் கிட்டத்தட்ட 32 வருட காலம் ரகசிய உறவைப் பேணி வாழ்ந்ததாகவும் பிபிசியின் ஆவணப் படம் ஒன்று கூறுகிறது. இந்த ஆவணப் படத்தில் போப்பாண்டவரின் சில முக்கிய கடிதங்கையும் வெளியிடவுள்ளது பிபிசி.
அப்பெண்மணி தனது காதலை போப்பாண்டவரிடம் சொன்னபோது அவர் கார்டினாலாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த ரகசிய வாழ்க்கை குறித்து எந்த ஒரு மறைமுக குறிப்பைக் கூட ஜான்பால் விட்டுச் செல்லவில்லை என்பதால் இது சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.
இதுதொடர்பாக சில கடிதங்களையும், புகைப்படங்களையும் பிபிசி வெளியிடவுள்ளது.
2005ல் மறைந்த போப்பாண்டவர் ஜான் பால்
போப்பாண்டவராக இருந்த 2ம் ஜான் பால் 2005ம் ஆண்டு மரணமடைந்தார். அவர் மறைந்து இத்தனை காலத்திற்குப் பிறகு தற்போது அவரது மறுபக்கம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அன்னா தெரசா டைமியனிக்கா
அவருடன் இணைத்துப் பேசப்படும் பெண்மணியின் பெயர் அன்னா தெரசா டைமியனிக்கா. இவர் போலந்து நாட்டைச் சேர்ந்த தத்துவ அறிஞர் ஆவார். இவரும், ஜான் பாலும் கிட்டத்தட்ட 32 வருட காலம் ரகசிய உறவைப் பேணி வந்ததாக கூறுகிறது பிபிசி.
திருமணம் செய்யாமல்
இருவரும் கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் தங்களது உறவையும் விடவில்லை. போப்பாண்டவரின் மரணம் வரை இது தொடர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவருக்கும் இடையே உடல் ரீதியான உறவு இருந்ததாக பிபிசி கூறவில்லை.
கிராகோவ் ஆர்ச்பிஷப்பாக இருந்தபோது
ஜான்பாலும் போலந்து நாட்டைச் சேர்ந்தவர்தான். அவர் கிராகோவ் நகர ஆர்ச்பிஷப்பாக இருந்தபோதுதான் அன்னா தனது காதலை அவரிடம் கூறியுள்ளார். அதை ஜான் பால் நீண்ட விவாகத்திற்குப் பிறகு ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
1973 முதல்
போப்பாண்டவர் எழுதிய சில கடிதங்களை மேற்கோள் காட்டி இந்த தகவலை வெளியிட்டுள்ளது பிபிசி. பிபிசி1 சானலில் இதுதொடர்பான நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது. இந்த தகவலின்படி, 1973ம் ஆண்டு அன்னா - ஜான் பால் உறவு தொடங்கியது.
அப்போது அவரது பெயர் கரோல்
அப்போது ஜான்பாலின் பெயர் கரோல் வோட்ஜிலா. கிராகோவ் நகர ஆர்ச் பிஷப்பாக இருந்தார். தான் எழுதிய ஒரு நூல் தொடர்பாக ஜான்பாலைச் சந்தித்தார் அன்னா. இருவரும் உரையாடியபோது அவர்களுக்குள் பல ஒற்றுமைகள் இருந்ததை உணர்ந்துள்ளனர்.
திருமணமான அன்னா
அன்னா, நாஜிக்களின் அடக்குமுறையில் சிக்கி மீண்டு வந்தவர். பின்னர் அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்தார். அங்கு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். அத்தம்பதிக்கு 3 குழந்தைகளும் பிறந்தனர். பின்னர் தத்துவஞானியாக மாறினார். கல்வியாளராகவும் திகழ்ந்தார்.
பலமுறை சந்திப்பு
முதல் சந்திப்பைத் தொடர்ந்து பலமுறை சந்தித்துள்ளனர் போப் ஜான்பாலும், அன்னாவும். மேலும் அப்போது ஜான்பால் எழுதி வந்த தி ஆக்டிங் பெர்சன் என்ற நூல் தொடர்பாகவும் இருவரும் சந்தித்துள்ளனர். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் பணியை அன்னா மேற்கொண்டார்.
மீண்டும் மீண்டும் படிக்கிறேன்
1974ம் ஆண்டு அன்னாவை ஜான்பால் சந்தித்தபோது, நீ எழுதிய நான்கு கடிதங்களை நான் திரும்பத் திரும்பப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறியுள்ளார்.
அன்னாவின் அமெரிக்க வீட்டில் தங்கினார்
பின்னொருமுறை அமெரிக்காவில் நடந்த பிஷப்கள் மாநாட்டிற்கு ஜான்பால் அழைக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் அமெரிக்கா சென்றபோது அங்குள்ள தனது பெற்றோர் வீட்டில் தங்கிக் கொள்ளுமாறு அவரை அழைத்துள்ளார் அன்னா. அவரும் போய்த் தங்கினார்.
புகைப்படங்கள்
அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் பிபிசி வெளியிட்டுள்ளது. அதில் இளம் வயது அன்னாவும், ஜான்பாலும் உள்ளனர். மிகவும் ஓய்வான நிலையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் அவை.
உறவுப் போராட்டம்
அன்னாவின் வீட்டில் ஜான்பால் தங்கியிருந்தபோதுதான் அவர்களுக்குள் உறவு குறித்த விவாதங்கள் தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஜான்பால் எழுதிய ஒரு கடிதத்தில் அன்னாவுடனான உறவு தொடர்பாக தான் உணர்வுப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக கூறியுள்ளார்.
கடவுள் அளித்த பரிசு
பி்ன்னொரு முறை ஜான்பால் எழுதிய கடிதத்தில் நீ கடவுள் அளித்த பரிசு. இதை நான் சொல்லாமல் இருக்க முடியாது. மறைக்காமல் இருக்க முடியாது என்று கூறியுள்ளார் ஜான்பால்.
என்னிடம் பதில் இல்லை
பின்னர் ஒரு கடிதத்தில் போப்பாண்டவர் கூறுகையில், மை டியர் தெரசா. நீ எழுதிய 3 கடிதங்களும் வந்து சேர்ந்தன. அதில் நீ எழுதியுள்ள வார்த்தைகள் எனக்குள் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளன. என்னிடம் அதற்குப் பதில் இல்லை. என்னால் பதில் சொல்லவும் முடியவில்லை என்று கூறியுள்ளார் ஜான் பால்.
பெர்சனல் கடிதங்கள்
ஜான்பால் தொடர்பான பல கடிதங்கள், ஆவணங்களை போலந்து தேசிய நூலகம் வாங்கி பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளது. ஆனால் இந்தக் கடிதங்களை மட்டும் அது வைக்கவில்லை. அதைத்தான் தற்போது பிபிசி வெளியிட்டுள்ளது.
அன்னாவின் கடிதம் கிடைக்கவில்லை
ஜான்பாலின் சில கடிதங்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில் அன்னாவின் கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்று பிபிசி கூறியுள்ளது. இதுதொடர்பாக போலந்து தேசிய நூலகத்தையும் தாங்கள் கேட்டு விட்டதாகவும் அது கூறியுள்ளது.
ஆச்சரியம்.. சர்ச்சை
ஒரு கார்டினால் மறைமுகமாக உறவு வைத்திருந்தார் என்பதை விட திருமணமான பெண்ணுடன் அதைப் பேணி வந்தார், அதை விட முக்கியமாக கிட்டத்தட்ட 32 வருட காலம் அது நீடித்தது என்பதுதான் பெரும் ஆச்சரியத்தையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜான்பால் தவறு செய்யவில்லை
இருப்பினும் தற்போதைய போப்பாண்டவர் முதலாம் பிரான்சிஸின் சுயசரிதையை எழுதியவரான ஜிம்மி பர்ன்ஸ் இதுகுறித்துக் கூறுகையில், தான் எடுத்துக் கொண்ட உறுதிமொழிக்கு புறம்பான முறையில் நடந்து கொள்ளாமல் இருந்திருப்பார் ஜான்பால் என்ற நம்பிக்கை உள்ளது. மேலும் அவர் மேற்கொண்டிருந்த உறவு அவருக்குள் மனிதத்தையே அதிகரித்திருக்க உதவியிருக்கும். உணர்வுப்பூர்வமாக பார்த்தாலும் கூட அவர் மீது குற்றம் சாட்ட எதுவும் இல்லை என்பதே எனது கருத்து என்று கூறியுள்ளார்.
வாடிகன் சிட்டி கருத்து
இந்த செய்தி குறித்து வாடிகன் சிட்டி கருத்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து வாடின் அதிகாரி ஒருவர் கூறுகையில், அன்னாவும், ஜான்பாலும் நட்பாக பழகி வந்தது அனைவருக்குமே தெரியும். புதிய தகவல் இதில் ஏதும் இல்லை. அதேபோல இன்னொரு பெண்ணான போல்ட்வாஸ்காவுடனும் ஜான்பால் நட்போடு பழகி வந்ததை அனைவரும் அறிவர். இதில் ரகசியம் ஏதும் இல்லை என்றார்.
மறைந்த போப்பாண்டவர் 2ம் ஜான்பால் குறித்த பிபிசியின் ஆவணப் படம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.