இந்தோனேஷியாவின் ரியோ ஜெயபுராவில் பயங்கர நிலநடுக்கம்- ரிக்டரில் 7.0 அலகுகளாக பதிவு!
ரியன் ஜெயபுரா: இந்தோனேஷியாவில் பப்புவாவிற்கு அருகில் ரியன் ஜெயபுரா கடலோர பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்நாட்டு நேரப்படி அதிகாலை 6.41 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ஜெயபுராவிலிருந்து 250 கிலோ மீட்டர் மேற்காக ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை. எனினும், அதிர்வுகளின் தாக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
"கிட்டதட்ட 4 நிமிடங்களுக்கு கடுமையான அதிர்வு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் இருப்பிடங்களை விட்டு வெளியில் ஓடி வந்தனர்" என்று பேரிடர் மைய பிரதிநிதி சுடோபோ புர்வோ நுங்கரகோ தெரிவித்துள்ளார்.
"சேதங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்த முதல்நிலைத் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நிலநடுக்கத்தின் மையம் இந்தோனேஷியாவின் ஆளரவமற்ற வடக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ளதால் தகவல்களைப் பெற தாமதமாகின்றது. கீழடுக்கு பாறைகளின் நகர்வு மிகவும் அதிகமாக இருந்து வருவதே இதற்கான முக்கிய காரணம்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
எனினும், இந்தோனேஷிய அதிகாரிகளோ, பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையமோ இந்நிலநடுக்கம் காட்டுப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள காரணத்தினால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications