காளி கோயில் விசிட்.. மாதுவா மக்களிடம் உருக்கம்.. மே.வங்க வாக்காளர்களுக்கு ஐஸ் வைக்கும் மோடி
டாக்கா: வங்கதேசத்தில் காளி கோயிலுக்குச் செல்வது, மாதுவா இன மக்கள் பற்றிப் பேசுவது என மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர்களைக் கவரும் செயல்களில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 15 மாதங்களாகப் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக நேற்று அவர் வங்கதேசம் சென்றிருந்தார்.
மேற்கு வங்கத்தில் நடைபெறும் தேர்தலில் வாக்காளர்களைக் கவரவே பிரதமர் மோடி வங்கதேசத்திற்குச் சென்றுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. இருப்பினும், அது பற்றி எல்லாம் பாஜக கவலை கொண்டதாகத் தெரியவில்லை.
காளி கோயில் வழிபாடு
இரண்டாம் நாளான இன்று பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்தின் சட்கிரா மாவட்டத்தில் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமையான ஜெஷோரேஷ்வரி காளி கோவிலுக்குச் சென்றார். அங்குப் பிரதமர் மோடி காளியிடம் வழிபாடு செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. கொரோனா தொற்றில் இருந்து உலகைக் காக்க உதவுமாறு காளி அம்மனிடம் வேண்டிக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்,
மோடி பேச்சு
மேலும், நூற்றாண்டு பழமைவாய்ந்த இந்த காளி கோயில் அமைந்துள்ள இடத்தின் அருகே ஒரு அரங்கத்தை அமைக்க அனுமதி கோரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். அந்த அரங்கும் அமைந்தால், அது பல வகையிலும் பயன்படும் என்று அவர் கூறினார். அகதிகள் தங்க வைக்க, கோயிலுக்கு வருபவர்கள் ஓய்வு எடுக்க, புயல் போன்ற இயற்கை பேரிடர்களிலிருந்து மக்களைக் காக்க எனப் பல வகைகளிலும் அது பயன்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
மாதுவா இன மக்கள்
அதன் பின்னர், ஓரகண்டியில் உள்ள மாதுவா இன மக்கள் இடையே பிரதமரே மோடி உரையாற்றினார். மேற்கு வங்கத்தில் மாதுவா இன மக்களைச் சந்தித்ததைக் குறிப்பிட்ட அவர், மாதுவா மக்கள் தன்னை குடும்பத்தில் ஒரு சகோதரனாகவே கருதுவதாகத் தெரிவித்தார். மேலும், வங்கதேசத்தின் 50ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட 130 கோடி இந்தியர்களின் அன்பை எடுத்து வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காரணம் என்ன
மேற்கு வங்கத்தில் இன்று தேர்தல் நடைபெறும் நிலையில் வாக்காளர்களைக் கவரும் வகையிலேயே பிரதமர் மோடி இப்படிச் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் காளி தெய்வமே பெரும்பாலான மக்கல் வணங்கும் தெய்வமாக உள்ளது. இதற்காகவே பிரதமர் மோடி காளி கோயிலுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதேபோல சுமார் 30 தொகுதிகளில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கும் அளவுக்கு மாதுவா இன மக்கள் உள்ளனர். அவர்களைக் கவரவும் வகையிலேயே பிரதமர் மோடி பேசியுள்ளார் என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.