திடீரென இஸ்ரேல் பிரதமருக்கு போன் அடித்த புதின்! மீண்டும் தொடங்கும் ஈரான் பஞ்சாயத்து?
மாஸ்கோ: காசா போர் நிறுத்தம் மற்றும் ஈரான் விவகாரம் சர்வதேச அளவில் கவனிக்கப்படும் பிரச்சனையாக மாறியிருக்கிறது. இந்நிலையில் திடீரென ரஷ்ய அதிபர் புதின், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு போன் அடித்து பேசியிருக்கிறார். இந்த உரையாடல் கவனம் பெற்றிருக்கிறது.
மேற்கு ஆசியாவின் தற்போதைய நிலவரம் குறித்து இருவரும் விவாதித்ததாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசா போர் நிறுத்தம், கைதிகள் பரிமாற்றம், ஈரானின் அணுசக்தி திட்டம் மற்றும் சிரியாவில் அமைதியை நிலை நாட்டுவது போன்ற முக்கிய அம்சங்கள் இந்த உரையாடலில் இடம்பெற்றன. அமெரிக்காவின் காசா அமைதித் திட்டம் ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் இரு நாட்டின் தலைவர்களும் தொலைப்பேசி வாயிலாக பேசியிருக்கிறார்கள்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே உடனடியாகப் போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். ஹமாஸால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள அனைத்து பிணைக்கைதிகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும். இஸ்ரேலியப் படைகள் காசாவில் இருந்து படிப்படியாக வாபஸ் பெற வேண்டும். காசாப் பகுதி முழுவதுமாக ஆயுதமற்ற தாக்கப்பட வேண்டும். அதாவது ஹமாஸ் மற்றும் பிற ஆயுதம் ஏந்திய குழுக்கள் நிராயுதபாணி ஆக்கப்பட வேண்டும்.
காசாப் பகுதியை நிர்வகிக்க, சர்வதேச மேற்பார்வையின் கீழ் ஒரு தற்காலிக நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். காசாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக, ஒரு சர்வதேசப் பாதுகாப்புப் படை அமைக்கப்படும் என்று அமெரிக்கா தனது அமைதி திட்டத்தில் வலியுறுத்தியிருக்கிறது.
சமீப காலமாக இரு தலைவர்களுக்கும் இடையே பலமுறை பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. கடந்த அக்டோபர் மாதத்திலும் புதினும், நெதன்யாகுவும் அமெரிக்காவின் காசா திட்டத்தைப் பற்றி விவாதித்திருந்தனர். சனிக்கிழமை நடந்த இந்த உரையாடலை புதின் தான் தொடங்கியதாக 'தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்' செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவின் யோசனையை இஸ்ரேல் ஆதரித்தாலும், ஹமாஸ் முழுமையாக ஏற்கவில்லை. இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் இந்த அழைப்பை உறுதி செய்தது. ஆனால் கூடுதல் விவரங்கள் எதையும் வெளியிடவில்லை. ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்காவின் தீர்மானத்திற்கு சீனா மற்றும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த 'அமைதி வாரியம்' என்ற யோசனையை தீர்மானத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று இரு நாடுகளும் வலியுறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இது ஒருபுறம் எனில், மறுபுறம் ஈரான் அணு ஆயுத அச்சுறுத்தல் தொடர்பாக இஸ்ரேல் தரப்பிலிருந்து கவலை தெரிவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. ஏனெனில் ஈரானின் அணு சக்தி திட்டத்திற்கு ரஷ்ய அதிக அளவுக்கு உதவியை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications