ஈராக்: கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் ஒருவர் தப்பினார்... முகாமில் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்
பாக்தாத்: ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் ஒருவர் தப்பி வந்துள்ளதாக ஈராக் செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது.
ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே உருவான மதக்கலவரம் தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா அரசுக்கு எதிராக சதாம் ஆதரவுப் படையான சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

ஏற்கனவே அவர்கள் மொசூல், கிர்குக், திக்ரித், சாதியா, ரமாடி சமர்ரா, ஜலாலா உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றி தங்கள் பிடியில் வைத்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றுவதில் தீவிர முனைப்பாக உள்ளனர்.
இந்நிலையில், மொசூல் நகரில் வேலை செய்து வந்த இந்திய கட்டிடத் தொழிலாளர்கள் 40 பேர் கடந்த 10ம் தேதி கடத்தப்பட்டனர். அவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளனர், அவர்களது கதி என்ன என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று 40 தொழிலாளர்களும் இருக்கும் இடம் தெரிய வந்தது. மொசூல் புறநகரில் உள்ள பஞ்சாலை மற்றும் அரசு கட்டிடங்களில் 40 தொழிலாளர்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களை மீட்க ஈராக் வெளியுறவுத்துறை அதிகாரிகளுடன் மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சு நடத்தியபடி உள்ளனர்.
இந்நிலையில், தற்போது கடத்தப்பட்ட இந்தியர்களில் ஒருவர் தீவிரவாதிகள் பிடியில் இருந்து தப்பி வந்துள்ளார். அவர் ஈராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான கிர்பில் நகரில் ஒரு முகாமில் இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், தீவிரவாதிகளிடமிருந்து தப்பிய அந்த இந்திய தொழிலாளி பத்திரமாக இருப்பதாக ஈராக் செம்பிறை சங்க தலைவர் டாக்டர் யாசீன் அப்பாஸ் உறுதி படத் தெரிவித்துள்ளார். தப்பி வந்த தொழிலாளியுடன் போன் மூலமாக வெளியுறவுத் துறை அதிகாரிகள் பேசியுள்ளனர். அத்தொழிலாளியுடன் நேரில் பேசுவதற்கு செம்பிறை சங்க மூத்த உறுப்பினர் ஒருவர் கிர்பி நகருக்கு விரைந்துள்ளார்.
தப்பி வந்தவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர், பெயர் உள்ளிட்ட விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.
இந்தச் சந்திப்பிற்கு பின்னர் மற்ற 39 இந்தியர்களின் நிலை என்ன, அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது பற்றிய தெளிவான விவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், அதி பயங்கரமான, ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகளிடம் இருந்து ஒரே ஒரு தொழிலாளி மட்டும் தப்பி வந்திருப்பது அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications