சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தில் பலியான 196 பயணிகளின் உடல்கள் கடத்தல்?
கீவ்: சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பலியானவர்களின் உடல்களை ஆயும் தாங்கிய பழங்குடியினரிடம் புரட்சிப் படையினர் ஒப்படைத்து விட்டதாகவும், அந்த உடல்களை மர்ம இடத்திற்கு அவர்கள் கொண்டு சென்று விட்டதாகவும் உக்ரைன் அரசு கூறியுள்ளது.
மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.17 ரக பயணிகள் விமானம் ஒன்று கடந்த 17ஆம் தேதி ரஷ்ய எல்லை பகுதி அருகே உக்ரைனில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதனை அங்குள்ள கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வீழ்த்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் 15 விமான ஊழியர்கள் உட்பட பயணம் செய்த அனைவரும் பலியாகி விட்டனர். அவர்களில் 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், உக்ரைனின் அவசர சேவை பிரிவின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அந்த பகுதியில் உள்ள பழங்குடியின பிரிவினர் அங்கிருந்த 196 உடல்களை அங்கிருந்து எடுத்து சென்று விட்டனர் என தெரிவித்துள்ளார்.
லாரி ஒன்றில் விமான விபத்து நடந்த சம்பவத்திற்கு வந்த அவர்கள் அனைத்து உடல்களையும் எடுத்து கொண்டு சென்றுள்ளனர். இன்று அங்கு சென்று பார்க்கையில், ஒரு உடல் கூட கிடைக்கவில்லை.

பழங்குடியினரிடம் ஒப்படைப்பு
உடல்களை ஆயுதம் ஏந்திய பழங்குடியினரிடம் ஒப்படைக்கும்படி அவசர சேவை பணியாளர்கள் நிர்ப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் உடல்களை பழங்குடியினரிடம் கொடுத்து விட்டனர்" என்று தெரிவித்துள்ளார்.

எங்கு கொண்டு சென்றனர்
இதனிடையே, உடல்களை பழங்குடியினர் எங்கு கொண்டு சென்று உள்ளனர் என்பது குறித்து அரசுக்கு திட்டவட்டமாக தெரியவில்லை என்று உக்ரைன் நாட்டு செய்தி தொடர்பாளர் நடாலியா பைஸ்ட்ரோ கூறியுள்ளார்.

குளிரூட்டப்பட்ட ரயிலில் உடல்கள்
அதேசமயம் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்திலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள டாரேஸ் என்ற ஊரில் உள்ள ரயில் நிலையத்தில் 198 உடல்கள் குளிரூட்டப்பட்ட ரயில் பெட்டிகளில் ஏற்றப்பட்டு அந்த ரயில் டான்ட்ஸ்க் நகருக்குப் புறப்பட்டுச் சென்றதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

அழுகிய உடல்கள்
ரயில் நிலையத்தில் சடலங்களின் நாற்றம் தாங்க முடியாத அளவுக்கு இருப்பதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர். ஆனால் சர்வதேச நிபுணர்கள் வந்து பார்வையிடும் வரை உடல்கள் அகற்றப்பட மாட்டாது என்று ரயிலை காவல் காக்கும் போராளிக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அமைப்பு உறுதி
ரயில் ஒருவழியாக நிலையத்தை விட்டு நகர்ந்து இலோவைஸ்க் என்ற ஊரை நோக்கிப் புறப்பட்டது. அங்கிருந்து டான்ட்ஸ்க் நகருக்குச் செல்லவிருக்கிறது. ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு, ரயிலில் 198 உடல்கள் இருப்பதை உறுதி செய்தனர்.

சாட்சியங்கள் அழிப்பு
இதற்கிடையே போராளிகள் சாட்சியங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. தக்க நடவடிக்கையை ரஷ்யா எடுக்கவில்லையெனில் ஐரோப்பிய யூனியன் நாடுகளின் கடும் நடவடிக்கைகளை ரஷ்யா எதிர்கொள்ள வேண்டி வரும் என்று பிரான்ஸ் எச்சரித்துள்ளது. இது பற்றி பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் தலைவர்கள் தொலைபேசியில் பேசியுள்ளனர்.












Click it and Unblock the Notifications