இந்தியா மிக மோசமான நிலைக்கு செல்ல.. மத & அரசியல் நிகழ்வுகள் தான் காரணம்.. உலக சுகாதர மையம் தகவல்
ஜெனீவா: சமூக இடைவெளியை பின்பற்றப்பாமல் அதிகளவில் நடத்தப்பட்ட மத நிகழ்ச்சிகளும் அரசியல் நிகழ்வுகளும் தான் இந்தியாவில் கொரோனா அதிகரிக்க முக்கிய காரணங்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் தீவிர தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3.62 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாகத் தேர்தலும். அதையொட்டி நடைபெற்ற பிரசாரங்களும் தான் இந்தியாவில் கொரோனா அதிகரிக்கக் காரணம் என நீதிமன்றங்களும்கூட தெரிவித்துள்ளன.

உருமாறிய கொரோனா வகை
இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவல், உருமாறிய கொரோனா உள்ளிட்டவை பற்றி உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதலில் B.1.617 உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்புகளும் அதிகரிக்க B.1.617, B.1.1.7 உள்ளிட்ட உருமாறிய கொரோனா வகைகள் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Array
இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கவும் வேகமாகப் பரவவும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். உருமாறிய கொரோனா வகைகள் வைரஸ் பரவல் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றப்பாமல் அதிகளவில் நடத்தப்பட்ட மத நிகழ்ச்சிகளும் அரசியல் நிகழ்வுகளும் கொரோனா பரவல் அதிகரிக்கக் காரணம்.

பொது சுகாதார கட்டமைப்பு
மேலும், பொது சுகாதாரத்தைச் சரியாகப் பயன்படுத்தாமல் விட்டதும் மற்றொரு காரணம். கொரோனா பரவல் அதிகரிக்க இவை எந்தளவு காரணம் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. உருமாறிய கொரோனா வகைகளைக் கண்டறிய மேற்கொள்ளப்படும் மரபணு வரிசைப்படுத்தலில், இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதைப் போலவே உருமாறிய கொரோனா வகைகள் கண்டறியப்படுவதும் அதிகரித்துள்ளது தெரிகிறது.

உருமாறிய வைரஸ் அதிகரிப்பு
ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு இந்தியாவில் B.1.617 கொரோனா வகை 21%, B.1.1.7 கொரோனா வகை 7% வரையும் கண்டறியப்படுகிறது. இந்த இரண்டு கொரோனா வகைகளும் மற்ற கொரோனா வகைகளைவிட வேகமாகப் பரவுகின்றன. தென் கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் பதிவு செய்யப்படும் கொரோனா பாதிப்புகளில் 95%, உயிரிழப்புகளில் 93% இந்தியாவில் தான் பதிவு செய்யப்படுகிறது.

பிரிட்டனில் அதிகரிக்கும் B.1.617 கொரோனா
இந்தியாவுக்கு வெளியே பார்த்தால் பிரிட்டன் நாட்டில் B.1.617 வகை கொரோனா மற்றும் B.1.617.2 வகை கொரோனா கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த B.1.617 வகையை கவலைக்குரிய கொரோனா வகை என உலக சுகாதார அமைப்பு கடந்த வாரம் தான் பட்டியலிட்டது. இந்த கொரோனா வகையை முழுமையாக அறிந்து கொள்வது குறித்தும் கூடுதல் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications