2016 ரியோ ஒலிம்பிக்கின் தலைவர் கைது.... வழக்குக்காகப் பதவியை ராஜினாமா செய்தார் !
ரியோ ஒலிம்பிக்கின் தலைவர் மோசடிக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்து , வழக்கு விசாரணைக்காக தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ரியோ டி ஜெனிரோ : 2016 ஒலிம்பிக்கை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடத்தியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக்க ஒலிம்பிக் கமிட்டி தலைவர் நுஸ்மான் கைது செய்யப்பட்டார். இதையடுத்து நுஸ்மான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
2016 ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் நடைப்பெற்றது. மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்த இந்த ஒலிம்பிக் போட்டி குறித்து இப்போது புதிதாக சர்சசை எழுந்துள்ளது.
இந்தப் போட்டியை நடத்த அனுமதி கேட்டு சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு லஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஒலிம்பிக் போட்டி தொடங்குவதற்கு முன்பே , பிரேசிலில் பலரும் போட்டிக்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர்.
"ஏற்கனவே நாடு ஏழ்மையில் இருக்கும் போது , இவ்வளவு செலவு செய்து இந்தப் போட்டியை நடத்துவது அவசியமா'' என கூறி நிறைய போராட்டங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் தற்போது ரியோ ஒலிம்பிக் லஞ்சப் புகாரிலும் சிக்கியுள்ளது.
ரியோவின் ஒலிம்பிக் தலைவராக இருந்த நுஸ்மான் , ரியோவில் ஒலிம்பிக்கை நடத்துவதற்காக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் சிலருக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற்றிருக்கிறார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக போலீசால் கைது செய்யப்பட்டார்.
அவர் கைது செய்யப்பட சில மணி நேரத்தில் தன்னுடைய ரியோ ஒலிம்பிக் கமிட்டி தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார் நுஸ்மான். வழக்கு விசாரணையில் கவனம் செலுத்துவதற்காக இவர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக கூறியுள்ளார்.
மேலும் 2020ல் நடக்கும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியின் உறுப்பினர் பட்டியலில் இருந்தும் இவர் நீக்கப்பட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியானது பிரேசிலின் ரியோ ஒலிம்பிக் கமிட்டியை மொத்தமாக கலைக்க உத்தரவிட்டுள்ளது.