பாகிஸ்தானுக்காக உளவு பார்த்த முன்னாள் அமெரிக்க பெண் தூதர் சிக்கினார்!
வாஷிங்டன்: பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக அமெரிக்க முன்னாள் பெண் தூதர் ராபின் ராபேல் சிக்கியுள்ளார். அவரிடம் அமெரிக்கா உளவு நிறுவனம் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்தவர் ராபின் ராபேல், மேற்கு ஆசிய நாடுகளுக்கான இணைவெளியுறவு அமைச்சராகவும், துனிஷியா நாட்டுக்கான தூதர், மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஆலோசகர் என பதவி வகித்தவர்.
கடந்த 2005 ஆம் ஆண்டு ராபின் ராபேல் ஓய்வு பெற்றார். அதே நேரத்தில் கடந்த 2009-ம் ஆண்டு முதல் பாகிஸ்தான் அரசுக்கு சிறப்பு ஆலோசகராகவும் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட், ராபின் ராபேல் பாகிஸ்தான் அரசுக்கு ஆதரவாக அமெரிக்காவில் இருந்து கொண்டே உளவு வேலை பார்ப்பதாக பரபரப்பு தகவலை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து ராபின் ராபேலை வளைத்து அமெரிக்காவின் உளவு அமைப்பான எப்.பி.ஐ. விசாரணை நடத்தியுள்ளது. மேலும் அவரது வீடு, அலுவலகமும் சீல் வைக்கப்பட்டுள்ளன.
இதே ராபின் ராபேல்தான் 1993ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து அப்போதைய பிரதமர் நரசிம்மராவை சந்தித்தார். மேலும் ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் ராபேல் தலையிட்டதாகவும் அப்போது சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.