பொருளாதார தடை எதிரொலி.. ரஷ்யாவில் உணவு தட்டுப்பாடு அபாயம்.. ரொட்டி, முட்டைக்கு கூட கட்டுப்பாடாம்..!
மாஸ்கோ : உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு உலக நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ள நிலையில் உணவு தட்டுப்பாடு அபாயத்தால் அங்கு உணவு பொருட்கள் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து பத்து நாட்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைன் என இரு நாட்டு மக்கள் சொல்ல முடியாத துயரங்களுக்கு ஆளாகி உள்ளனர்.
போர் காரணமாக உக்ரைன் நாட்டை விட்டு ஏராளமானோர் வெளியேறி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்கும் பணியானது வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உக்ரைன் மீது தாக்குதல்
தாக்குதலை நிறுத்த கோரி பல நாடுகள் கோரிக்கை விடுத்தும் ரஷ்யா அதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தாக்குதல் நடத்திய நிலையில் ரஷ்யா மீது பொருளாதார ரீதியாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பலமுனை தாக்குதலை தொடங்கி உள்ளன. உக்ரைனின் சிறு நகரங்களைக் கைப்பற்ற தொடங்கியுள்ள நிலையில், பெரிய நகரங்களை கைப்பற்ற தீவிர முனைப்பு காட்டி வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் பொருளாதாரத் தடைகளை தீவிரப்படுத்தி உள்ளன.

பொருளாதாரம் வீழ்ச்சி
இதனால் அந்த நாட்டின் பணமதிப்பு 30 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல அந்நாட்டின் பங்கு சந்தைகளும் 40 சதவீத அளவுக்கு வீழ்ச்சி கண்டன. ஏற்கனவே கடும் விலைவாசி பிரச்சினையில் சிக்கித் தவித்து வரும் ரஷ்யாவில் பணமதிப்பு வீழ்ச்சி பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அந்நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் அபாயம் உள்ளது. ரஷ்ய விமானங்கள் போக்குவரத்தையும் அமெரிக்கா பிரிட்டன் கனடா போன்ற நாடுகள் தடை செய்துள்ள நிலையில் உணவு ஏற்றுமதி இறக்குமதி பெரும் சவாலாக உள்ளது.

பொருளாதார தடை
பொருளாதார தடை காரணமாக ரஷ்யாவில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் உணவுப் பொருட்களை கட்டுப்படுத்த உணவுப் பொருட்களின் விற்பனைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ரஷ்ய நாட்டின் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடை காரணமாக ரஷ்யா பாதிக்கப்பட தொடங்கியுள்ளது. இதனால் உணவுப் பொருட்கள் தனியார் தேவைக்கு அதிகமாக பல டன்கள் வரை பதுக்கி வைப்பதாக புகார் எழுந்துள்ளதாக தெரியவந்துள்ளது என கூறியுள்ளது.

விற்பனைக்கு கட்டுப்பாடு
இதன் காரணமாக சில்லறை விற்பனை மற்றும் உணவுப் பொருட்களை வைப்பதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர்களுக்கு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் குறிப்பிட்ட அளவுக்கே விற்பனை செய்யப்பட வேண்டும் எனவும் வர்த்தக அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தன. இதை தொழில் மற்றும் வர்த்தகம் விவசாயத்துறை அமைச்சகங்கள் ஆதரித்து உள்ளதாகவும் அரிசி, முட்டை, ரொட்டி , காய்கறிகள், இறைச்சி வகைகள் மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அரசின் கட்டுப்பாடுகளுக்குக் கீழ் கொண்டுவரப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications