'கோல்டன் டீல்' கொடுக்கும் ரஷ்யா.. டிரம்ப்பை பழிவாங்க இந்தியாவுக்கு இதுவே சரியான வாய்ப்பு!
மாஸ்கோ: வரி விஷயத்தில் இந்தியாவை டிரம்ப் சீண்டி பார்க்கிறார். இதற்கு சரியான பதிலடியை கொடுக்கும் வாய்ப்பை நமக்கு ரஷ்யா உருவாக்கி கொடுத்திருக்கிறது. போர் விமானம் கொள்முதலில் ரஷ்யாவின் ஆஃபரை பயன்படுத்திக்கொள்வதன் மூலம் அமெரிக்காவின் மூக்கை உடைக்க முடியும்.
இந்த விஷயத்தில் கறாராக இருந்தால்தான் நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியும். மட்டுமல்லாது சூதானமாக எடுக்கும் முடிவுகள் நாட்டின் எதிர்காலத்தில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

ரஷ்யா சொன்னது என்ன?:
ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபோரோனெக்ஸ்போர்ட்டின் இயக்குநர் ஜெனரல் அலெக்சாண்டர் மிகீவ் நேற்று செய்தியாளர்களை சந்தித்திருந்தார். அப்போது, "இந்தியாவுக்கு SU-57E எனும் 5ம் தலைமுறை போர் விமானத்தை வழங்க ரஷ்யா ரெடி. மட்டுமல்லாது அதை இந்தியாவிலிலேயே தயாரிக்கவும், தயாரிப்புகளை ஒழுங்கமைக்கவும் ரஷ்யா முன்வந்திருக்கிறது" என்று கூறியுள்ளார். ரஷ்யாவின் TASS செய்தி ஊடகம் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது.
இந்த விஷயம் இந்தியாவுக்கு நல்ல செய்திதான். பழம் நழுவி பாலில் விழுந்த கதையாக.. ரஷ்ய டீலிங் மூலம் 2 விஷயத்தை சாதிக்க முடியும்.
1. இந்தியாவில் சொந்தமாக 5ம் தலைமுறை விமானத்தை உற்பத்தி செய்வது
2. அமெரிக்காவின் நெருக்கடிக்கு ரஷ்யா மூலமாக புல் ஸ்டாப் வைப்பது
முதல் விஷயத்தை எடுத்துக்கொண்டால்.. நம்மிடம் 5ம் தலைமுறை போர் விமானங்கள் கிடையாது. ஆனால் சீனாவிடம் 2 விமானங்கள் இருக்கிறது. இதை வைத்து சும்மா இல்லாத சீனா.. அதை பாகிஸ்தானுக்கு விற்க திட்டமிட்டிருக்கிறது. பக்கத்தில் இருக்கும் 2 நாடுகளுக்கும் 5ம் தலைமுறை போர் விமானங்கள் வந்துவிட்டால் அது நமக்குதான் சிக்கல். எனவே நாம் உடனடியாக எதையாவது செய்ய வேண்டும்.
என்ன செய்வது? உள்நாட்டில் 5ம் தலைமுறை விமானங்களை தயாரிக்க திட்டம் இருக்கிறது. Tejas Mark-2 மற்றும் AMCA திட்டங்கள் மூலம் நம்மால் விமானங்களை தயாரிக்க முடியும். ஆனால்.. இதை செய்து முடிக்க குறைந்தது 2030 வரையாவது ஆகும். அதுவரை பாகிஸ்தானும், சீனாவும் சும்மா இருக்குமா?
இந்தியாவுக்கான ஆஃபர்கள்:
எனவே நிச்சயம் வெளிநாட்டிலிருந்துதான் விமானங்களை வாங்க முடியும். இப்போதைக்கு அமெரிக்காவும், ரஷ்யாவும் விமானங்களை விற்க ரெடியாக உள்ளன. அமெரிக்க விமானங்களை பொறுத்தவரை கொஞ்சம் காஸ்ட்லி. இதற்கு முன்னர் அமெரிக்க போர் விமானங்களை இந்திய விமானப்படை இயக்கியது கிடையாது. எனவே இதற்காக தனியாக பயிற்சியும் பெற வேண்டும். மட்டுமல்லாது கையில காசு.. வாயில தோசை என்கிற ரீதியில்தான் அமெரிக்காவின் டீலிங் இருக்கும்.
ரஷ்யா உடனான வர்த்தகம்:
ரஷ்யா அப்படி கிடையாது. இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து நமக்கு ஆயுதங்களை சப்ளை செய்து வருகிறது. நம்பகமான ஆள். வாங்குன பொருள் வேலை செய்யல என்று சொன்னால் அதை மாற்றி கொடுக்கவும், சரி செய்து கொடுக்கவும் ரஷ்யா உறுதியளிக்கும். இப்போது ஒருபடி மேலே போய் இந்தியாவிலேயே 5ம் தலைமுறை விமானத்தை உற்பத்தி செய்துக்கொள்ளுங்களேன் என தொழில்நுட்பத்தை கொடுக்க முன்வந்திருக்கிறது. இது பெரிய விஷயம்தான்.
ஏற்கெனவே ரஷ்யாவின் Su-30MKI ரக விமானத்தை நாம் உற்பத்தி செய்து வருகிறோம். எனவே ரஷ்ய விமான உற்பத்தியின் சில நுட்பங்கள் நமக்கு தெரிந்திருக்கிறது. அத்துடன் ரோசோபோரோனெக்ஸ்போர்ட் (அதாங்க ரஷ்ய ஆயுத வியாபாரி) கொடுக்கும் சில நுட்பங்களையும் சேர்த்து கிண்டினால் நமக்கு தேவையான 5ம் தலைமுறை போர் விமானம் சுடசுட ரெடி!
அமெரிக்காவின் டீலிங்:
மட்டுமல்லாது AMCA விமான உற்பத்திக்கும் ரஷ்யா உதவுவதாக தெரிவித்திருக்கிறது. ஆக ரஷ்ய விமானத்தை வாங்குவதில் இவ்வளவு பிளஸ் பாயிண்டுகள் இருக்கின்றன. மறுபுறம், அமெரிக்காவிடம் என்னதான் டீல் பெசினாலும், நம் மீது வரியை விதிக்க டிரம்ப் தயங்க மாட்டார். எனவே அமெரிக்காவின் மூக்கை உடைக்க ரஷ்யாவுடனான டீலிங்தான் சரியான வாய்ப்பு என்று பலரும் கூறுகின்றனர்.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் வாசகர்களே?












Click it and Unblock the Notifications