முக்கிய திருப்பம்.. இந்தியா-சீனா பிரச்சினையில் தலையிடப்போவதில்லை- ரஷ்யா அறிவிப்பு
மாஸ்கோ: இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இடையே மத்தியஸ்தம் செய்வதற்கு ரஷ்யா தயாராக இல்லை என்பது தெரியவந்துள்ளது.
Recommended Video
லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினர் ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டபோது, இந்திய ராணுவத்தினர் தடுத்ததால், மோதல் வெடித்தது.
இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.

முதல் வெளிநாட்டு பயணம்
கடந்த பிப்ரவரி மாதம் முதல் எந்த ஒரு மத்திய அமைச்சரும் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளாத நிலையில், கொரோனா வைரஸ் பரவலுக்கு இடையே ராஜ்நாத்சிங் ரஷ்யா சென்றது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆசிய பிராந்தியத்தில் சீனாவுக்கு இணையான பெரிய அண்ணன் அந்தஸ்தில் இருக்கக்கூடிய ஒரு நாடு ரஷ்யா. மேலும் மிக நீண்ட காலமாக அந்த நாடு இந்தியாவுடன் நெருக்கமான நட்புறவை பராமரித்து வருகிறது என்பதும் பாதுகாப்பு அமைச்சரின் இந்த பயணம் குறித்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தின.

ரஷ்யா மீது மிகுந்த எதிர்பார்ப்பு
இரண்டாம் உலகப்போரின் வெற்றி தின அணிவகுப்பில் ராஜ்நாத்சிங் பங்கேற்க சென்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், அவரது பயணத்தின்போது ரஷ்ய தரப்பிலிருந்து, சில முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அப்படி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நேற்று நிருபர்களுக்கு ராஜ்நாத்சிங் பேட்டியளித்தபோது கூட சீனா பற்றி எதுவும் கூறவில்லை.

வீடியோ ஆலோசனை
இந்த நிலையில், ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோ, இந்தியா-சீனா பிரச்சினையில், ரஷ்யா மத்தியஸ்தம் செய்யாது என்று அறிவித்துள்ளார். ரஷ்யா, இந்தியா மற்றும் சீனாவின் வெளியுறவு அமைச்சர்கள் இடையேயான வீடியோகான்பரன்ஸ் ஆலோசனை நேற்று நடைபெற்றது. இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி ஆகியோரும், செர்ஜி லாவ்ரோவும் இதில் கலந்து கொண்டனர்.

உதவி தேவையில்லை
"இந்தியாவிற்கும் சீனாவிற்கும் எந்த உதவியும் தேவையில்லை என்று நான் நினைக்கிறேன்" என்று லாவ்ரோவ் கூறினார். "எல்லை மோதல் சம்பவங்கள் நடந்தவுடன், ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டு, ராணுவம் மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் இடையே தொடர்பு உருவாக்கப்பட்டது" என்று லாவ்ரோ கூறியதாக 'ஸ்பூட்னிக் நியூஸ்' கூறியுள்ளதாக, பிடிஐ ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது.

பேச்சுவார்த்தை
"நான் புரிந்துகொண்டபடி, இந்த தொடர்புகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகின்றன. இந்த பேச்சுவார்த்தையில் விருப்பமில்லை என இரு நாடுகளுமே தெரிவிக்கவில்லை. எனவே, இப்போதுள்ள நடைமுறைப்படி, இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு தீர்வு காணும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று லாவ்ரோவ் கூறியுள்ளார்.

நேரு காலத்தில் நடந்தது என்ன?
1962 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே குறுகிய கால போர் நடைபெற்றது. சீனப் படைகள் வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளை வீழ்த்தி முன்னேறி வந்து கொண்டிருந்தன. அப்போது ரஷ்யா இந்தியாவிற்கு உதவிக்கரம் நீட்டவில்லை. ஆனால், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிடம் நேரு உதவி கோரினார். அவர்கள் உதவி செய்ய ஆயத்தமான தகவல் வெளியான நிலையில், சீனா போர் நிறுத்த உடன்படிக்கையை செய்து கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த முறை, இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளுமே, வேறு நாடுகள் தலையிட வேண்டாம் என்பதில் உறுதியாக உள்ளன.












Click it and Unblock the Notifications