"டேமேஜ் ரொம்ப அதிகம்!" ரஷ்யாவின் மோஸ்கவா கப்பல்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய உக்ரைன்?
கீவ்: உக்ரைன் போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரஷ்ய கடற்படை பெரிய பின்னடைவை எதிர்கொண்டுள்ளது.
கடந்த பிப். இறுதியில் உக்ரைன் போர் தொடங்கியது. ரஷ்ய அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சிலான தாக்குதலைத் தொடங்கியது.
இதன் காரணமாக உக்ரைன் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல லட்சம் பேர் அகதிகளாக அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.

உக்ரைன் போர்
இந்தப் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. போர் தொடங்கிய சில நாட்களிலேயே இரு தரப்பிற்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையும் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் இடையே பெரியளவில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, துருக்கியில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் பல விகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது.

தொடரும் சிக்கல்
மேலும், உக்ரைன் தலைநகர் கீவ் அருகே இருக்கும் ராணுவத்தைக் குறைக்கவும் ரஷ்ய ராணுவம் ஒப்புக்கொண்டது. இதனால் உக்ரைன் போர் மிக விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், உக்ரைன் மற்றும் ரஷ்யா இரு தரப்பும் தாக்குதலை முழுமையாக நிறுத்தவில்லை. இதன் காரணமாக உக்ரைன் போர் முடிவுக்கு வருவதில் சிக்கல் தொடர்ந்து கொண்டே வந்தது.

ரஷ்ய கடற்படை
இந்தச் சூழலில் ரஷ்யக் கடற்படைக்குச் சொந்தமான முக்கிய கப்பல் ஒன்றை உக்ரைன் தாக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்தத் தாக்குதலில் ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டு வந்த கப்பல் மிக மோசமாகச் சேதமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மோஸ்கவா கப்பலை குறி வைத்து உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் இதனால் ஏற்பட்ட தீவிபத்தில் அந்தக் கப்பல் மிக மோசமாக சேதமடைந்து உள்ளதாகவும் ரஷ்யா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நடந்தது என்ன
உக்ரைன் படைகளின் ஏவுகணை கப்பலைத் தாக்கியதாக ஒடெஸாவின் ஆளுநர் தெரிவித்தார். அதேநேரம் சிலர் அங்கு என்ன தாக்குதல் நடந்தது என்றே தெரியவில்லை என்று தெரிவித்தனர். இந்த கப்பல் போர் தொடங்கிய போது, உக்ரைனுக்கு எதிராக விரைவாக ஆயுதங்களை எடுத்துச் செல்ல பெரியளவில் உதவியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக சிரியா நாட்டில் போர் நடைபெற்ற போதும், இதே கப்பல் தான் முக்கியமாகப் பயன்பட்டது குறிப்பிடத்தக்கது.
Recommended Video

போர் என்ன ஆகும்
கீவ் நகரில் இருந்து ரஷ்யா தனது ராணுவத்தைக் குறைத்துக் கொண்டது. அதேநேரம் உக்ரைனின் மரியுபோல் நகரைக் குறிவைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோல் நகரைக் கைப்பற்ற ரஷ்ய ராணுவம் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து முயன்று வருகிறது. இந்தச் சூழலில் தான் ரஷ்யாவின் முக்கிய கப்பலை உக்ரைன் தாக்கி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications