கத்தாரில் உள்ள அமெரிக்க தளத்தின் மீதான வான்வழித் தாக்குதல்களை ஆதரித்த ரஷ்யா.. ஈரான் சொன்ன சீக்ரெட்
தெஹ்ரான்: கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு ரஷ்யா தனது ஆதரவை வழங்கியதாக ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஜீஸ் நசீர்சாதே தெரிவித்தார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று இஸ்ரேல் ஈரான் என இருநாடுளும் உடனே போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும் என அறிவித்து போரை முடிவுக்கு கொண்டு வந்தார். இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலூசோவ் இஸ்ரேலுடன் போர் விவகாரத்தில் ஈரானை ஆதரித்தார் என்று ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் அமெரிக்காவும் கடந்த இரண்டு நாள் முன்பு இணைந்தது. தன்னுடைய பி-2 ரக விமானங்கள் மூலம் ஈரானின் 3 அணுசக்தி தளங்களை கடந்த திங்கள் அன்று தாக்கியது. ஈரானின் முக்கியமான அணுஉலைத்தளமான போர்டோ அணுசக்தி தளத்தில் பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசி அமெரிக்கா தகர்த்தது. மேலும் நவீன ஏவுகணைகளையும் வீசி ஈரானை நிலைகுலைய வைத்தது.

இந்த தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என ஈரான் அறிவித்தது. அமெரிக்காவின் தாக்குதலை தொடர்ந்து ஈரானின் படைகளுக்கு அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்த சுதந்திரம் வழங்கப்பட்டு இருப்பதாக நேற்று அந்த நாட்டின் கூட்டுப்படை தளபதி அப்துல் ரகிம் மவுசவி அறிவித்தார்.
இதனால் அமெரிக்க ராணுவ தளங்கள் மீது எந்த நேரத்திலும் ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஈரானின் இந்த எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கத்தார் அரசு தனது வான் எல்லையை மூடிவிட்டது.
ஆனால் இதையும் மீறி ஈரான் ராணுவம் நேற்று இரவு கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளமான அல் உதெய்த் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. அங்குள்ள அமெரிக்க வீரர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடந்தது. இதைப்போல ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளம் மீதும் தாக்குதல் நடத்தியது. எனினும் இந்த தாக்குதல்களில் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் எதுவும் இல்லை..
இந்நிலையில் டிரம்ப் நேற்று செய்தியாளர்களிடம் பேசும் போது, போரை இஸ்ரேலும் ஈரானும் நிறுத்த ஒப்புக்கொண்டதாக கூறினார். அதன்படியே போர் முடிவுக்கு வந்துள்ளது. முன்னதாக கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப்படை தளத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதற்கு ரஷ்யா தனது ஆதரவை வழங்கியதாக ஈரானிய பாதுகாப்பு அமைச்சர் பிரிகேடியர் ஜெனரல் அஜீஸ் நசீர்சாதே கூறினார். மேலும் அவர் கூறுகையில், இஸ்ரேலை எங்கள் முழு பலத்தாலும் தண்டிப்போம். எங்கள் மீது கட்டாயப்படுத்தி திணிக்கப்பட்ட எந்தவொரு அமைதியையும் (போர் நிறுத்தம்) நாங்கள் நிராகரிப்போம்" என்று நசீர்சாதேஷ் கூறியிருக்கிறார்.
இந்நிலையில் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஆண்ட்ரி பெலூசோவ் கூறும் போது, "அவர்களின் (அமெரிக்காவின்) உண்மையான நோக்கம் ஈரானை பலவீனப்படுத்துவதும், மத்திய தரைக்கடல் பகுதி முழுவதும் குழப்பத்தை பரப்புவதும் தான் என்றும், ரஷ்யா அனைத்து முன்னேற்றங்களையும் கண்காணித்து ஈரானை ஆதரிக்கும்" என்று கூறியிருக்கிறார். இந்நிலையில் முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ், ஈரானுக்கு அணு ஆயுதங்களை பிறநாடுகள் வழங்கும் என்று கூறியிருந்தார். இதனால் கோபம் அடைந்த டிரம்ப்,இது உண்மையா அல்லது கற்பனையா.. உண்மை தான் என்றால் உடனே இதனை எனக்கு தெரியப்படுத்துங்கள் என்று கூறினார். ஈரான் இஸ்ரேல் இரண்டுமே போர் நிறுத்தத்தை முழுமையாக விரும்பவில்லை.. போர் நிறுத்தத்தை திணிக்கப்பட்டதாக கருதுகின்றன.












Click it and Unblock the Notifications