கைவிட்ட சீனா! கடைசியில் இந்தியாவிடம் உதவி கேட்ட ரஷ்யா! உக்ரைன் போருக்கு மத்தியில் மிகப்பெரிய உதவி!
மாஸ்கோ: உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதனால் ஐரோப்பா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் மருத்துவ உபகரணங்கள் சரிவடைந்துள்ளதால் இந்த தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவிடம், ரஷ்யா உதவி கோரியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா பிப்ரவரி 24 முதல் போர் தொடுத்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா, பிரிட்டன் உள்பட மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன.
வால்பாறை சாலை விபத்தில் சிக்கிய வாலிபர் மூளைச்சாவு - 5 பேருக்கு கண்கள், சிறுநீரகம், கல்லீரல் தானம்
மேலும் இந்த நாடுகள் உக்ரைனுக்கும் பணம், ஆயுத உதவிகள் வழங்கி வருகின்றன. ரஷ்யா தனது போர் நடவடிக்கையில் இருந்து இன்னும் பின்வாங்கவில்லை.
பொருளாதார தடைகள்
இதனால் ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் இன்னும் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ரஷ்யாவுக்கான பல்வேறு பொருட்களின் ஏற்றுமதியை உலக நாடுகள் குறைத்துள்ளன. குறிப்பாக ஐரோப்பிய, சீனாவில் இருந்து செல்லும் மருத்துவ உபகரணங்களுக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.
உதவி கோரும் ரஷ்யா
இந்த பிரச்சனையை தீர்க்க ரஷ்யா, இந்தியாவை நாடியுள்ளது. இதுதொடர்பாக ஏப்ரல் 22ல் இந்தியா மற்றும் ரஷ்யாவின் மருத்துவ உபகரண நிறுவனங்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளன. இந்த இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது இந்தியாவில் இருந்து ரஷ்யாவுக்கு மருத்துவ உபகரண ஏற்றுமதியை அதிகரிப்பது குறித்து விவாதிக்கப்பட உள்ளது என இந்திய மருத்துவ சாதன தொழிற்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜீவ் நாத் கூறியுள்ளார். மேலும் இது இருதரப்பு உறவுகளை ஊக்குவிப்பதோடு, ரஷ்யா-இந்தியா இடையேயான வர்த்தகத்தை ரூபிள், ரூபாய் அடிப்படையில் மேற்கொள்ள வழிவகுக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஏற்றுமதியை அதிகப்படுத்த வாய்ப்பு
மருத்துவ உபகரண ஏற்றுமதியை பொறுத்தவரை ரஷ்ய சந்தையில் இந்தியா முக்கியமானதாக இல்லை. ஆனால் உலக நாடுகள் ரஷ்யாவை தனித்து விடுவதால் இந்தியாவின் கை மேலோங்கலாம். இதன்மூலம் இந்த ஆண்டு ஏற்றுமதியை 10 மடங்கு அதிகரித்து 2 பில்லியன் ரூபாயாக (26.2 மில்லியன் அமெரிக்க டாலர்) மாற்ற வாய்ப்பு ஏற்படலாம் என அவர் தெரிவித்தார்.
இந்தியா-ரஷ்யா உறவு எப்படி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் இந்தியா நடுநிலைமை வகிக்கிறது. இதனால் இந்தியா-ரஷ்யா உறவு பலமானதாக மாறியுள்ளது. மேலும், கச்சா எண்ணெயை சலுகை விலைக்கு இந்தியாவுக்கு தர ரஷ்யா முன்வந்தது. இது ஒருபுறம் இருக்க அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவை குற்றம்சாட்டுகின்றன. அதாவது உக்ரைன் மீது போருக்கு உலக நாடுகள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்குவதாக விமர்சனம் செய்துள்ளன. இந்நிலையில் தான் மருத்துவ உபகரணம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.