முடிவுக்கு வரும் போர்? துருக்கியில் இன்று ரஷ்யா - உக்ரைன் நேரடி பேச்சுவார்த்தை.. புதின் பங்கேற்பு?
அங்காரா: உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 3 ஆண்டுகளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சி செய்தார். ஆனால் அது பலனளிக்கவில்லை. இந்நிலையில் தான் போர் தொடங்கி 3 ஆண்டுகளை கடந்த பிறகு முதல் முறையாக இன்று துருக்கியில் வைத்து ரஷ்யா - உக்ரைன் பிரதிநிதிகள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதில் ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி பங்கேற்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் போரை தொடங்கியது. இந்த போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. 3 ஆண்டுகளை கடந்தும் போர் என்பது தொடர்ந்து வருகிறது. இந்த போரில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் என்று பல ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

இந்த போரை நிறுத்த பல நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. ஆனால் அது பலனளிக்கவில்லை. குறிப்பாக அமெரிக்க அதிபராக கடந்த ஜனவரியில் டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார். அதன்பிறகு அவர் போரை நிறுத்த தீவிரம் காட்டினார்.
போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க பிரதிநிதிகள் தனித்தனியாக ரஷ்யா மற்றும் உக்ரைனுடன் பேசினர். அதுமட்டுமின்றி வெள்ளை மாளிகைக்கு சென்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு பிரச்சனையில் முடிந்தாலும் கூட அதன்பிறகு அமெரிக்கா சொல்வதை கேட்க தொடங்கிய அதிபர் ஜெலன்ஸ்கி. இதையடுத்து மீண்டும் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தீவிரமானது.
இதற்கிடையே தான் கடந்த 8ம் தேதி முதல் 10ம் தேதி வரை உக்ரைன் மீதான போரை 3 நாட்களுக்கு ரஷ்யா தற்காலிகமாக நிறுத்தியது. இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு வந்ததன் 80ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி போர் நிறுத்தம் அமலானது. அதன்பிறகு மீண்டும் போர் தொடங்கி நடந்து வருகிறது. இதற்கிடையே தான் மே 15ம் தேதிக்குள் நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு ரஷிய அதிபர் புதின் அழைப்பு விடுத்தார்.
அதாவது உக்ரைனில் 30 நாட்கள் தற்காலிகமாக போரை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா சார்பில் ரஷ்யாவுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதனை புதின் ஏற்கவில்லை. முதலில் உக்ரைனுடன் பேச வேண்டும். அதன்பிறகு தான் அதுபற்றி முடிவு எடுக்கப்படும் என்று அவர் கூறினர். அதன்பிறகு தான் உக்ரைனை போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு புதின் அழைப்பு விடுத்தார்.
அதனடிப்படையில் உக்ரைன் - ரஷ்யா இடையே இன்று துருக்கியின் இஸ்தான்புல்லில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கி 3 ஆண்டுகள் கடந்த நிலையில் இருநாடுகளும் நடத்தும் நேரடி முதல் பேச்சுவார்த்தை இதுவாகும். இதற்காக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது பிரதிநிதிகள் துருக்கி சென்றுள்ளனர். இந்த பேச்சுவார்த்தையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்பார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் புதின், டொனால்ட் டிரம்ப் ஆகியோர் பங்கேற்கவில்லை.
அதேவேளையில் ரஷ்யா சார்பில் மூத்த அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அதன்படி ரஷ்யாவின் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சர் மிக்கேல் காலுஜின், பாதுகாப்பு துறையின் துணை அமைச்சர் அலெக்சாண்டர் போமின்,ரஷ்யா ராணுவ உளவுத்துறை தலைவர் இகோர் கோஸ்யுகோவ் உள்ளிட்டவர்கள் பங்கேற்க உள்ளனர்.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பங்கேற்காததால் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் இதில் பங்கேற்க மாட்டார் என்று சொல்லப்படுகிறது. அதற்கு பதில் அவர் தனது பிரதிநிதிகளை வைத்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும் உக்ரைன் சார்பில் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறாரா? இல்லாவிட்டால் உக்ரைன் பிரதிநிதிகள் பங்கேற்கிறார்களா? என்பது கடைசி நேரத்தில்தான் தெரியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications