ஜெலென்ஸ்கி செய்த அந்த ஒரு மேட்டர்.. ஆவேசமான புதின்.. இறங்கி தாக்கும் ரஷ்ய ராணுவம்! என்ன நடக்கிறது?
மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து சர்வதேச தலைவர்கள் பலரும் கருத்து கூறி வருகிறார்கள். இதற்கிடையே போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ள ரஷ்யா, உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கை திட்டமிட்டபடி தொடரும் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் இப்போது மீண்டும் தீவிரமடைந்துள்ளது. ரஷ்யாவின் சில பகுதிகள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தி இருந்த நிலையில், அதற்கு புதின் ராணுவம் மிகத் தீவிரமாகப் பதிலடி கொடுத்து வருகிறது.

போர் நிறுத்தம்: இதற்கிடையே போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான திட்டம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பேசியிருந்த நிலையில், அதை ரஷ்யா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. போரை முடிவுக்குக் கொண்டு வரும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ள ரஷ்யா, தனது சிறப்பு ராணுவ நடவடிக்கை தொடரும் என்று கூறி இருக்கிறது.
ரஷ்யா உக்ரைன் இடையேயான இந்த மோதல் ஆண்டுக் கணக்கில் தொடர்கிறது. இருப்பினும், இதைப் போர் என்று ரஷ்யா கூறுவதில்லை. தனது நாட்டை பாதுகாக்க எடுக்கப்படும் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே கூறி வருகிறது. இப்போதும் கூட சிறப்பு ராணுவ நடவடிக்கை தொடரும் என்றே ரஷ்யா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் அதிபர்: முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, போர் நிறுத்தம் குறித்த தனது திட்டத்தை அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் அமெரிக்காவில் இப்போது அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டிரம்ப்- கமலா ஹாரிஸும் பகிர்ந்து கொள்ள உள்ளதாகக் கூறியிருந்தார். இருப்பினும், அவர் தனது போர் நிறுத்ததிடம் என்ன என்பதை வெளிப்படையாகப் பகிர்ந்து கொள்ளவில்லை.
செய்தியாளர்களிடம் பேசிய ஜெலென்ஸ்கி, "ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் இப்போது நாங்கள் ஊடுருவி இருக்கிறோம். இது எங்கள் போர் நிறுத்தத்தின் ஒரு பகுதி திட்டம் தான். இது தவிரப் பொருளாதார மற்றும் தூதரக ஆலோசனை திட்டங்களும் இதில் இருக்கிறது. மேலும், ரஷ்யாவுக்குள் நீண்ட தூரம் ஊடுருவித் தாக்குதல் நடத்தும் ஆயுதங்களைப் பயன்படுத்த அமெரிக்கா எங்களை அனுமதிக்கவில்லை. இதற்கான அனுமதியை அமெரிக்கா அளித்தால் போரை முடிவுக்குக் கொண்டுவர எங்களால் ரஷ்யாவைக் கட்டாயப்படுத்த முடியும்" என்றார்.
வாய்ப்பே இல்லை: இருப்பினும், போர் நிறுத்தம் குறித்த ஜெலென்ஸ்கியின் பேச்சை ரஷ்யா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ள ரஷ்யா, உக்ரைன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கை தொடரும் என்றும் கூறியுள்ளது. இது தொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "உக்ரைன் தரப்பு இதுபோல சொல்வது முதல்முறை இல்லை. போர் நிறுத்தம் என அவர்கள் சொன்னாலும் அவர்களின் உண்மையான பிளான் என்ன என்பது எங்களுக்குத் தெரியும்.
என்ன காரணம்: தற்போதைய சூழலில் சிறப்பு ராணுவ நடவடிக்கையை நிறுத்த எந்தவொரு திட்டமும் இல்லை. எங்கள் இலக்குகளை அடையும் வரை சிறப்பு ராணுவ நடவடிக்கை தொடரும். அதில் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம்" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். அதாவது ஒரு பக்கம் தாக்குதலை நடத்திவிட்டு, போர் நிறுத்தம் என்பதை ஏற்க முடியாது என்பதே ரஷ்யாவின் கருத்தாக இருக்கிறது.
பின்னணி: ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த 2022 முதல் இந்த மோதல் தொடர்ந்து வருகிறது. இடையில் சில காலம் சண்டை ஓய்ந்து இருந்த போதிலும், இப்போது போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. கடந்த ஆக. 6ம் தேதி ரஷ்யா மீது உக்ரைன் ஊடுருவியுள்ளது. அதேபோல கிழக்கு உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியிலும் தனது தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியா குறித்து கேள்விக்குப் பதிலளித்த ரஷ்ய அதிபர் மாளிகை செய்தி தொடர்பாளர், "அமைதியான முறையில் போரை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று இந்தியா சொல்வதை ஏற்கிறோம். ஆனால், தற்போதைய சூழலில் பேச்சுவார்த்தை நடத்துவது வீண். அதற்கு எந்தவொரு பயனும் இருக்கப் போவதில்லை" என்றும் கூறினார்.












Click it and Unblock the Notifications