"மங்கலான பார்வை.. பறிபோன உணர்ச்சி!" மிக மோசமான நிலையில் புதின்?பதறிய ஓடி வந்த உறவினர்கள்! என்னாச்சு
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே அவரது உடல்நிலை மிகவும் மோசாகிவிட்டதாகப் பரபர ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
உக்ரைன் போர் கடந்தாண்டு பிப். மாதம் தொடங்கியது அனைவருக்கும் தெரியும். அப்போது தொடங்கிய உக்ரைன் போர் ஓராண்டைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்த போரால் உலக பொருளாதாரமும் பாதிக்கப்பட்டே இருக்கிறது.

கடந்த ஆண்டு ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஹெல்த் எப்போதும் விவாதப் பொருளாகவே இருந்து வருகிறது. இதனிடையே அவரது உடல்நிலை குறித்த புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
புதின்: அதில் அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புதினுக்கு தலையில் கடுமையான வலி, மங்கலான பார்வை, நாக்கில் உணர்வின்மையும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரது மருத்துவர்கள் பீதியடைந்துள்ளனர் என்று மெட்ரோ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில், இந்த செய்தி பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ரஷ்யாவில் பாதுகாப்புப் படையில் உயர் பொறுப்பில் இருப்பவர் டெலிகிராம் வாயிலாக புதின் உடல்நிலை குறித்த ரகசியத் தகவல்களை வெளியிட்டு வருகிறார். அவரே தான் இந்த புதிய தகவலையும் அளித்துள்ளார். மேலும், புதின் தனது வலது கை மற்றும் காலில் மெல்ல உணர்வை இழக்கத் தொடங்கி உள்ளதாகவும் அவருக்கு உடனடியாக மருத்துவச் சிகிச்சை தேவை என்றும் மருத்துவர்கள் நினைப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மறுக்கும் புதின்: நிலைமை ஒரு கட்டத்தில் சற்று மோசமாக மாற டாக்டர்கள் அவருக்கு முதலுதவி செய்ததாகவும், மருந்து எடுத்துக்கொண்டு பல நாட்கள் ஓய்வெடுக்கவும் புதினை அறிவுறுத்தியதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் ரஷ்ய அதிபர் புதின் மருத்துவர்களின் அறிவுரையைப் புறந்தள்ளி ஓய்வெடுக்க மறுத்ததாகவும், அதற்குப் பதிலாக உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் குறித்துத் தெரிந்து கொள்ளவே ஆர்வமாக இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இருப்பினும், எப்படியோ புதின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இது அவரது மருத்துவக் குழுவுக்கு நிம்மதியை ஏற்படுத்துவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பதறிய உறவினர்கள்: இது குறித்த அந்த அதிகாரி மேலும் கூறுகையில், "அதிபரின் உறவினர்கள் மிகவும் கவலைப்பட்டனர், புதின் உடல்நிலை திடீரென இப்படி மோசமானது அவர்களுக்குப் பதற்றத்தை ஏற்படுத்தியது.. பீதி என்றே சொல்லலாம். குறிப்பாக அவரது நெருங்கிய உறவினர்கள் பதற்றமடைந்தனர். ஏனென்றால் புதின் திடீரென மரணமடைந்தால் அது நெருங்கிய உறவினர்களுக்குத் தான் பெரிய அபாயத்தைத் தரும். அவர்கள் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் தான் புதினின் கால் அசாதாரண முறையில் ஆடிக்கொண்டே இருந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியது. பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோவுடனான சந்திப்பின் போது, புதின் கால்கள் தன்னிச்சையாக ஆடிக்கொண்டே இருந்தது. அவரால் அவரது கால்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்பது போலவே தோன்றியது.

முதல்முறை இல்லை: ரஷ்ய அதிபர் புதின் புற்றுநோய் மற்றும் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவே ஸ்பானிஷ் செய்தி நிறுவனமும் தெரிவித்துள்ளது. ரஷ்ய அதிபர் மாளிகையில் இருக்கும் ஒரு காவலர் இதை உறுதி செய்துள்ளதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். அவருக்கு பார்கின்சன் நோயின் ஆரம்பக்கட்ட பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும் இதன் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இருப்பினும், அதிபர் மாளிகை இதை பொதுவெளியில் அறிவிக்காமல் மறைத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், ரஷ்ய அதிபர் மாளிகையும் ரஷ்ய அமைச்சர்களும் புதின் ஆரோக்கியமாகவே இருப்பதாகக் கூறி உடல்நிலை குறித்த தகவல்களைத் தொடர்ந்து மறுத்தே வருகின்றனர்.












Click it and Unblock the Notifications