அடுத்த குறி ஊடகங்கள்? புதின் அரசு முக்கிய உத்தரவு.. கொந்தளிக்கும் ரஷ்யா செய்தியாளர்கள்.. பரபர தகவல்
மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் போர் தொடரும் சூழலில், அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவை கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை போர் தொடுத்தது. நேட்டோ அமைப்பு தொடர்பாகத் தொடர்ந்து எச்சரித்து வந்த புதின், கடந்த வியாழக்கிழமை முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்க உத்தரவிட்டார்.
கடந்த வியாழக்கிழமை தொடங்கி இந்த போர் 3ஆவது நாளாக இன்றும் போர் தொடர்ந்து வருகிறது. இதற்கு உலகின் பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்த போதிலும், ரஷ்யா இதற்கெல்லாம் அஞ்சுவதாகத் தெரியவில்லை.

ரஷ்ய மக்கள் போராட்டம்
ரஷ்யாவின் பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புதின் தொடர்ந்து கூறி வருகிறார். இதை உலக நாடுகள் மட்டுமில்லை, ரஷ்யர்களே பலரும் கூட ஏற்கவில்லை. உக்ரைன் மீதான புதினின் போர் நடவடிக்கைக்கு எதிராக ரஷ்யர்கள் வீதிக்கு இறங்கிப் போராடி வருகின்றனர். போருக்கு எதிராகப் போராடினால், கைது செய்யப்படுவீர்கள் என அறிவித்த போதிலும், அதற்கெல்லாம் ரஷ்யர்கள் அஞ்சவில்லை. மாஸ்கோ தொடங்கிப் பல நகரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதைச் சமாளிக்கும் வகையில் ரஷ்யா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

புதிய உத்தரவு
குறிப்பாக இந்த போர் மட்டும் நடைபெறவில்லை என்றால் ரஷ்யாவின் பாதுகாப்பே கேள்விக் குறியாகிவிடும் என்ற ரீதியில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இருப்பினும், ரஷ்யாவில் உள்ள சில ஊடகங்கள் உக்ரைன் போர் தொடர்பான கள நிலவரங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வந்தன. இந்நிலையில், அதைக் கட்டுப்படுத்தும் வகையில் ரஷ்யா அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. உக்ரைன் போர் தொடர்பான செய்திகளை வெளியிடக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

கட்டுப்பாடு
அதாவது உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல், படையெடுப்பு அல்லது போர் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி செய்தி வெளியிடக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. இதைப் பின்பற்ற மறுக்கும் ஊடகங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும் இல்லையென்றால் ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்கப்படும் என அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது. உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையில் உயிரிழப்புகள் தொடர்பாக சில ஊடகங்கள் நம்பமுடியாத உண்மையற்ற தகவல்களைப் பரப்புவதாக ஒளிபரப்பு துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

நோட்டீஸ்
இது தொடர்பான எச்சரிக்கை நோட்டீஸை ரஷ்யா அங்குள்ள பல்வேறு ஊடகங்களுக்கு அனுப்பியுள்ளது. ராணுவ நடவடிக்கை தொடர்பான நம்பமுடியாத உண்மையற்ற தகவல்களை உடனடியாக நீக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த சேனலும் பிளாக் செய்யப்படும் என எச்சரித்துள்ளது. இது தொடர்பாக விசாரணையைத் தொடங்கி உள்ளதாகத் தெரிவித்துள்ள ஊடக அமைச்சகம், குற்றம் நிரூபிக்கப்படும் ஊடகங்களுக்கு 50 லட்சம் ரூபிள்கள் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது

நடவடிக்கை
ராணுவ நடவடிக்கை தொடர்பான தகவல்கள் அரசின் அதிகாரப்பூர்வ சேனல்களில் வெளியிடப்படுவதாகவும் அதற்கேற்ப தகவல்களை அப்டேட் செய்யும்படியும் ஊடக நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் மீதான தாக்குதலைக் கண்டித்து ரஷ்யாவின் 300 செய்தியாளர்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அரசுக்கு அனுப்பி இருந்தார். அவர்கள் மீதும் கூட நடவடிக்கை எடுப்பது குறித்து ரஷ்யா ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

சுற்றி வளைத்துத் தாக்குதல்
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஒரு போதும் ரஷ்யாவிடம் சரணடைய மாட்டோம் என்றும் கடைசி வரை தாய்நாட்டிற்காகப் போராடுவோம் என்றும் தெரிவித்திருந்தார். இதனால் மீண்டும் போர் உக்கிரமடைந்துள்ளது. குறிப்பாக உக்ரைன் நாட்டை அனைத்து திசைகளில் இருந்தும் சுற்றி வளைத்துத் தாக்குதல் நடத்தத் தனது ராணுவத்திற்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. ரஷ்யாவின் ராணுவ பலம் அதிகம் என்பதால் சில நாட்களில் உக்ரைனை முழுவதுமாக கைப்பற்றலாம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications