"கறுப்பு ஆடு.." உக்ரைன் பேச்சுவார்த்தை குழுவில் ரஷ்ய உளவாளி! சுட்டு தள்ளிய உக்ரைன் படை? பரபர தகவல்
கீவ்: உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கும் இடையே போர் தொடர்ந்து நடைபெறும் நிலையில், அமைதி பேச்சுவார்த்தையில் இடம் பெற்றிருந்த குழு பற்றி முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரைன் எல்லையில் கடந்த ஜன. முதலே ரஷ்யா தொடர்ந்து தனது ராணுவத்தைக் குவித்து வந்தது. மேலும், எல்லைக்கு மிக அருகிலேயே போர் பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தது பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்தது.
ரஷ்யா மறுத்தாலும் மேற்குலக நாடுகள் உக்ரைன் மீது போர் தொடுப்பதே ரஷ்யாவின் எண்ணம் எனத் தொடர்ந்து எச்சரித்து வந்தனர். அதன்படி கடந்த பிப். 14ஆம் தேதி முழு வீச்சிலான போரைத் தொடங்க புதின் உத்தரவிட்டார்.

உக்ரைன் போர்
புதின் உத்தரவைத் தொடர்ந்து உக்ரைன் மீது முழு வீச்சிலான ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. 10 நாட்களைக் கடந்து 11ஆவது நாளாகவும் இந்தப் போர் தொடர்கிறது. இந்தப் போருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உலக நாடுகள், ரஷ்யா மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளையும் அறிவித்து வருகின்றன. இருப்பினும், இதற்கெல்லாம் அஞ்சி புதின் போரைக் கைவிடுவதாகத் தெரியவில்லை. உக்ரைனில் நாளுக்கு நாள் போர் அதிகமாகிக் கொண்டே தான் செல்கிறது.

அமைதி பேச்சுவார்த்தை
குறிப்பாக உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை குறித்து வைத்து ரஷ்ய ராணுவம் இப்போது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் அங்குள்ள அப்பாவி மக்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே இரு தரப்பிற்கும் இடையே போரை நிறுத்துவது தொடர்பாக இரண்டு முறை அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிப். 27 மற்றும் மார்ச் 1ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற போதிலும் அதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதனால் போர் தொடர்கிறது.

ரஷ்ய உளவாளி
இந்தச் சூழலில் உக்ரைன் பேச்சுவார்த்தை குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவர் ரஷ்ய உளவாளி என்பதை உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு (Service of Ukraine) கண்டுபிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவரை உக்ரைன் பாதுகாப்பு அமைப்பு சுட்டுக் கொன்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை உக்ரைன் நாட்டில் பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ள போதிலும், இதுவரை உக்ரைன் அரசு சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

சுட்டுக்கொலை
உக்ரைன் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது டெனிஸ் கிரியே என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் ரஷ்யா உளவாளி என்பதை நிரூபிக்கும் வகையில் தொலைப்பேசி உரையாடல் உட்பட அனைத்து ஆதாரங்களும் தங்களிடம் உள்ளதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெனிஸ் கிரியே கைது செய்யும் சமயத்தில், அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

யார் இவர்
டெனிஸ் கிரியே 2006 முதல் 2008 வரை, எஸ்சிஎம் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்தார். அங்கு அவர் துணை பொது இயக்குநராக இருந்தார். அதைத் தொடர்ந்து ஆஸ்திரிய நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்த அவர் பின்னர் உக்ரெக்ஸிம் வங்கியின் மேற்பார்வைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். பின்னர் 2010 முதல் 2014 வரை, உக்ரைன் அரசு வங்கி வாரியத்தின் முதல் துணைத் தலைவராகவும் தனியார் ஈக்விட்டி ஃபண்ட் நிறுவனத்திலும் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

ரஷ்ய ஆதரவு தலைவருடன் தொடர்பு
இந்த டெனிஸ் கிரியே உக்ரைனின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான ஆண்ட்ரி க்லியூ என்பவரது தீவிர ஆதரவாளராகக் கருதப்படுகிறார். இந்த ஆண்ட்ரி க்லியூ உக்ரைனின் முன்னாள் அதிபரும் ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றவருமான விக்டர் யானுகோவிச்சின் கூட்டாளியாகக் கருதப்படுகிறது. உக்ரைன் நாட்டிற்கு எதிரான போரில் வெற்றி பெறும்பட்சத்தில் இந்த விக்டர் யானுகோவிச்சை தான் புதிய அதிபராக நியமிக்க புதின் திட்டமிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications