ரஷ்யாவின்....ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து...நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கிறது...ஆய்வில் தகவல்!!
மாஸ்கோ: ரஷ்யா கண்டுபிடித்து இருக்கும் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் வி பாதுகாப்பானது என்றும் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தவில்லை என்பது முதல் கட்ட ஆய்வின் முடிவில் தெரிய வந்து இருப்பதாக மருத்துவ வார இதழான தி லான்செட் தெரிவித்துள்ளது.
உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தாக பதிவு செய்யப்பட்டு இருக்கும் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்தை தொடர்ந்து 42 நாட்கள் ஆய்வு செய்து வந்ததாகவும், இது பாதுகாப்பானது என்றும் முதல் கட்ட ஆய்வின் முடிவு குறித்து ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த செய்தி தி லான்செட் மருத்துவ வார இதழில் இடம் பெற்றுள்ளது.

மனித பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட அனைவருக்கும் 21 நாட்களில் நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்து இருப்பதாக லான்செட் தெரிவித்துள்ளது. அக்டோபர் மாதத்தில் பெரிய அளவில் 40,000 பேருக்கு இந்த மருந்து செலுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அப்போது, இந்த மருந்து இந்தியாவிலும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த மருந்தை மூன்றாவது மனித பரிசோதனைக்கு உட்படுத்துவது குறித்து மத்திய அரசுடன் பேசப்பட்டு வருகிறது என்று ரஷ்ய அரசு தெரிவித்து இருந்தது.
ஆனால், குறைந்த மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்த மருந்தை பதிவு செய்து இருப்பதாகவும், இது எந்தளவிற்கு கொரோனாவை கட்டுப்படுத்தும் என்பது சந்தேகமே என்று அறிவியல் விஞ்ஞானிகள் முன்பு கருத்து தெரிவித்து இருந்தனர். இந்த தடுப்பு மருந்து 28 நாட்களில் டி செல்களை உருவாக்குகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த மருந்தைதான் தனது மகள் போட்டுக் கொண்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications