வங்கதேசத்துக்கு சவால் விட்ட ரஷ்யா.. முகமது யூனுஷ்க்கு வரும் பெரும் சிக்கல்.. புதின் அடுத்து எடுக்கும் அதிரடி
டாக்கா: வங்கதேசத்தில் முகமது யூனுஷ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்ததில் இருந்தே அந்த நாடு, நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது. இதன் அடுத்தக்கட்டமாக ஷேக் ஹசீனா குடும்பத்துடன் சேர்ந்து 5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஊழல் செய்துள்ளதாக முகமது யூனுஷ் தலைமையிலான அரசு ரஷ்யாவின் அரசு நிறுவனம் மீது பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ள நிலையில் ரஷ்யா பதிலடி கொடுத்துள்ளது. அப்படி என்ன நடந்தது? வாங்க பார்க்கலாம்.
நமது நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையே நல்ல உறவு இருந்தது. ஆனால் இந்த உறவு கடந்த ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வந்தது.
வங்கதேச வன்முறையை தொடர்ந்து நம் நாட்டுடன் நெருக்கமாக செயல்பட்டு வந்த அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ராஜினாமா தான் இதற்கு காரணம்.

தற்போது ஷேக் ஹசீனா நம் நாட்டில் உள்ள நிலையில் வங்கதேசத்தில், நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது. இந்த அரசு நம் நாட்டுடன் மோதலை தான் கடைப்பிடித்து வருகிறது. அங்கு இந்துக்கள், கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.
எல்லையில் ட்ரோன் கண்காணிப்பு, நமது எதிரான பாகிஸ்தான், சீனாவுடன் நெருக்கம் காட்டுவது உள்ளிட்ட வேலைகளில் முகமது யூனுஷ் செயல்பட்டு வருகிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக பாகிஸ்தானின் ஒரு பகுதியாக இருந்த வங்கதேசத்தை தனி நாடாக உருவாக்க நம் ராணுவம் தான் பாகிஸ்தான் வீரர்களுடன் சண்டையிட்டு சரணடைய வைத்து மிகப்பெரிய அளவில் உதவி செய்தது. அதன்பிறகே 1971 ல் புதிய நாடாக வங்கதேசம் உருவானது. இந்த வரலாற்றை மறைப்பதிலும் முகமது யூனுஷ் அரசு உறுதியாக உள்ளது.
இதனால் தான் சமீபத்தில் கூட விஜய் திவாஸ் (வங்கதேசம் உருவாக பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வென்ற தினம்) டிசம்பர் 16ல் கொண்டாடப்பட்டது. அப்போது பிரதமர் மோடி நம் நாட்டு வீரர்களின் போர், தியாகத்தை நினைவுக்கூர்ந்ததற்கு முகமது யூனுஷ் அரசில் இடம்பெற்றிருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இப்படியா நம் நாட்டுடன் வங்கதேசம் மோதலை கடைப்பிடித்து வருகிறது.
இதற்கு நம் நாடும் உரிய முறையில் வங்கதேசத்துக்கு தக்க பதிலடியை கொடுத்து வருகிறது. இதற்கிடையே தான் முகமது யூனுஷ் அரசு ரஷ்யா நாட்டு அரசு நிறுவனம் மீது 5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு ஊழல் புகாரை சுமர்த்தி உள்ளது. இதனால் ரஷ்யா கடும் கோபமடைந்து முகமது யூனுஷ் தலைமையிலான வங்கதேச இடைக்கால அரசை கடுமையாக சாடியுள்ளதோடு, நீதிமன்றத்தில் பார்த்து கொள்கிறோம் என்று சவால் விடுத்துள்ளது.
அதாவது வங்கதேசத்தில் புதிதாக ரூப்பூர் அணு மின் நிலையம் கட்டும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இந்த அணுமின் நிலையம் என்பது தலைநகர் டாக்காவில் இருந்து வடமேற்கில் 160 கிலோமீட்டர் தொலைவில் பாப்னா மாவட்டத்தில் பத்மா நதிக்கரையில் இஷ்வர்தி உபாசிலாவில் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் பணிகள் முழுமையாக முடியவில்லை.
இருப்பினும் அணுமின் நிலையத்தின் முதல் 2 யூனிட்டுகளை அடுத்த ஆண்டு செயல்பாட்டு கொண்டு வரும் வகையில் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த அணுமின் நிலைய பணிகள் முழுவதுமாக முடிந்து செயல்பாட்டு வரும்போது ஆண்டுக்கு 16 பில்லியன் (ஒரு பில்லியின் என்பது 100 கோடி) யூனிட் அளவுக்கு மின்சாரம் தயாரிக்க முடியும்.
இந்த அணுமின் நிலையத்தில் ரியாக்டர் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளை மேற்கொள்ளும் பணியை ரஷ்யா நாட்டு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதாவது ரஷ்ய அரசுக்கு சொந்தமான அணு கழகமான ரோஷடமின் (Rosatom) இன்ஜினியரிங் பிரிவு அட்மேனர்கோமாஷ் (Atomenergomash) சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் வங்கதேச இடைக்கால அரசு பகிரங்கமாக ரஷ்யா அரசு நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டி உள்ளது.
இதுதொடர்பாக வங்கதேசத்தின் ஊழல் தடுப்பு ஆணையம் சார்பில்,‛ரூப்பூர் அணுமின் நிலைய திட்டத்தில் ஊழல் நடந்துள்ளது. முன்னாள் பிரதமர் ஹசீனா, அவரது மகன் சஜீப் வாஜித் ஜோய் மற்றும் சகோதரி மகளும், பிரிட்டனின் எம்பியுமான துலிப் சித்திக் ஆகியோர் மலேசியாவில் உள்ள வெளிநாட்டு வங்கி கணக்குக்கு 900 மில்லியன் அமெரிக்க டாலர்களை அனுப்பி உள்ளனர். மேலும்உள்விசாரணை அணுஉலை கட்ட தொடங்கிய 2011ம் ஆண்டு முதல் இதுவரை 5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு முறைகேடு நடந்துள்ளது '' என்று கூறியுள்ளது.
இந்த குற்றச்சாட்டை ரஷ்யாவின் அணு கழகமான ரோஷடம் முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுபற்றி ரோஷடம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது: ரூப்பூர் அணுமின் திட்டம் என்பது 2.65 பில்லியன் அமெரிக்க டாலர் திட்டமாகும். இந்த திட்டத்தில் வெளிப்படை தன்மை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றத்தில் வழக்கை எதிர்கொள்ளவும் தயாராக இருககிறோம். வங்கதேச இடைக்கால அரசின் இந்த குற்றச்சாட்டு என்பது ரோஷடமின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளது. ஏனென்றால் அனைத்து திட்டங்கள் குறித்த பாலிசிகளும் திறந்த வெளியில் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் அணுமின் நிலையத்துக்கான பொருட்களின் கொள்முதலில் வெளிப்படை தன்மை கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்டனல் ஆடிட்டும் அடிக்கடி மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் பார்த்து கொள்கிறோம் என்று ரஷ்யாவின் ரோஷடம் அதிரடியாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே தான் தற்போது இன்னொரு கேள்வி எழுந்துள்ளது. அதாவது ரூப்பூர் அணுமின் நிலைய பணிகள் முழுவதுமாக முடியாத நிலையில் இந்த குற்றச்சாட்டால் அந்த பணியை ஒப்பந்தப்படி ரஷ்யா தொடருமா? இல்லை பாதியில் வெளியேறி முகமது யூனுஷ் அரசுக்கு பிரச்சனையை ஏற்படுத்துமா? என்பது ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் கையில் தான் உள்ளது. ஏனென்றால் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள ரோஷடம் என்பது ரஷ்யா அரசு நிர்வகிக்கும் அமைப்பாகும். இதன் காரணமாக இந்த விவகாரத்தில் ரஷ்யாவின் அடுத்த நடவடிக்கை என்பது என்னவாக இருக்கும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications