பயணிகளை வெளியேற்ற தாமதம்... மாலுமிகளின் செயல் கொலைக்குச் சமம் : தென்கொரிய அதிபர் கண்டனம்
ஜிந்தோ: கப்பல் முழ்குகிறது எனத் தெரிந்தும் பயணிகளை வெளியேற்றத் தாமதப்படுத்திய கேப்டன்களின் செயல் கொலைக் குற்றத்திற்குச் சமம் என கண்டனம் தெரிவித்துள்ளார் தென் கொரிய அதிபர் பார்க் குயன்-ஹை.
கடந்த புதனன்று தென்கொரிய தலைநகர் சியோலுக்கு அருகே உள்ள இன்செயான் துறைமுகத்தில் இருந்து, ஜெஜூ தீவுக்கு 339 பள்ளி மாணவர் உள்பட 475 பேருடன் சுற்றுலா சென்ற கப்பல் எதிர்பாராத விதமாக நடுக்கடலில் மூழ்கியது.

இந்த விபத்தில் 64 பேர் பலியானார்கள். 175 பயணிகள் மீட்கப்பட்டனர். இன்னும் 238 பேர் கதி என்ன என்பது தெரியாததால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாயமான பலரைத் தேடும் பணி வானிலை காரணமாக தொய்வாக நடந்து வருகிறது. இந்நிலையில் கப்பலின் கேப்டன் மற்றும் இரண்டு உதவி கேப்டன்கள் உட்பட நான்கு பேரைக் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் விபத்து ஏற்பட்ட போது கப்பலை ஆறு மாதங்களே அனுபவம் உடைய 25 வயது பெண் மாலுமி ஓட்டி வந்ததாக தெரிய வந்துள்ளது. எந்தவித முன் அனுபவமும் இல்லாத அப்பெண், கப்பலை வழக்கத்திற்கு மாறாக மிகவும் வேகமாக ஓட்டியுள்ளார் என்றும் கண்டறியப் பட்டுள்ளது.
இந்நிலையில் கப்பல் விபத்து குறித்து தென்கொரிய அதிபர் பார்க் குயன்-ஹை மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கப்பல் மாலுமிகளின் செயலை அவர் வன்மையாக கண்டித்து பேசினார்.
இது தொடர்பாக அவர் பேசும்போது, ‘கப்பலின் கேப்டனும், சில மாலுமிகளும் கப்பல் கவிழ்ந்து நீரில் மூழ்குவது தெரிந்த பின்னரும் உயிர் காக்கும் படகுகள் மூலம் பயணிகளை தப்பிக்க வைக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. 40 நிமிடங்கள் கழித்தே அவர்கள் தப்புவதற்கு அனுமதியளித்துள்ளனர். கப்பல் மாலுமிகளின் இந்த செயல் கொலைச் செயலுக்கு சமம் ஆகும். இந்த பேரழிவுக்கு காரணமானவர்கள் அத்தனை பேர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்' என உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications