பரிசு தரலையாம்.. அதுக்காக இப்படியா.... ‘டை’யை இறுக்கி கணவரைக் கொல்ல முயற்சித்த ‘காதல்’ மனைவி!
டோக்கியோ: ஜப்பானில் நடந்த "வெள்ளை தினத்தன்று" பரிசு தராமல் ஏமாற்றியதால், கணவரின் கழுத்தை நெறித்துக் கொலை செய்ய முயற்சித்த மனைவியை ஜப்பான் போலீசார் கைது செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. அன்று ஜப்பானில் அந்நாட்டுப் பெண்கள் தங்களின் கணவர், நண்பர்கள், குழந்தைகள், உயரதிகாரிகள் போன்றோருக்கு பரிசுப் பொருட்கள் வழங்குவது வழக்கம்.
காதலர் தினத்தன்று பரிசு வழங்கிய பெண்களை மகிழ்விக்கும் வகையில், மார்ச் 14ம் தேதி வெள்ளை தினமாக ஜப்பானில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் தங்களோடு பயணிக்கும் பெண்களுக்கு பரிசுப் பொருட்கள் தந்து மகிழ்வர்.
வழக்கம் போல, கடந்த 14ம் தேதி ஜப்பானில் வெள்ளை தினம் கொண்டாடப்பட்டது. சகாய் நகரைச் சேர்ந்த 43 வயது நிஷியாம்மாவும் தனது கணவர் தனக்கு ஏதாவது பரிசு நிச்சயம் தருவார் என எதிர்பார்த்துள்ளார். ஆனால், அவரது கணவர் பரிசு எதுவும் தராமல் அவர் பாட்டுக்கு இருந்து விட்டதாக தெரிகிறது.
இதனால், கணவர் மீது கடும் கோபத்தில் இருந்த நிஷியாம்மா, கடந்த திங்களன்று கணவருக்கு கழுத்தில் ‘டை' கட்டி விடுவது போல், கழுத்தை நெறித்துக் கொல்ல முயற்சித்துள்ளார். ஒரு வழியாக மனைவியின் பிடியில் இருந்து தப்பிய கணவர், உடனடியாக இது தொடர்பாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த போலீசார் நிஷியாம்மாவைக் கைது செய்தனர். கழுத்தில் சிறிய காயங்களுடன் இருந்த கணவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், ‘வெள்ளை தினத்தில் பரிசு வாங்கித் தராத கணவர் மீது கோபத்தில் இருந்தது உண்மை தான் என்றும், அதற்காக டையை கொஞ்சம் அழுத்திக் கட்டியது உண்மை தான் என்றும், ஆனால் கணவரைக் கொலை செய்யும் எண்ணமெல்லாம் தனக்கில்லை' என்றும் நிஷியாம்மா தெரிவித்துள்ளார்.
என்னம்மோ போங்க... வல்லவனுக்கு புல்லும் ஆயுதம். இனி, வீட்டுக்காரம்மாவை யாராவது நம்பி "டை" கட்டி விடச் சொல்லுவீங்க...!!!