சிங்கப்பூர் லிட்டில் இந்தியா கலவரம்: மதுபான விற்பனை தடையில் தளர்வு
சிங்கப்பூர்: சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் கடந்த 8-ம் தேதி ஏற்பட்ட கலவரத்தை அடுத்து அப்பகுதியில் மதுபானங்கள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில், இன்று சிங்கப்பூர் போலீஸ் நிர்வாகம் அந்த தடையை தளர்த்தியுள்ளது.
இது தொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
லிட்டில் இந்தியா பகுதி கலவரத்திற்கு மது பானம் அருந்தியதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இதனால், ஒவ்வொரு வார இறுதியிலும், விடுமுறை நாட்களிலும், விடுமுறைக்கு முந்தைய நாட்களிலும் கலவரப்பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள லிட்டில் இந்தியா பகுதியில் மதுபானங்கள் விற்பனைக்கான தடை அமலில் இருக்கும்.

கலவர-விசாரணைக்குழுவின் பரிந்துரை வரும்வரை 6 மாத காலத்திற்கு இந்த தடை நீடிக்கும். ஆனால், லிட்டில் இந்தியா பகுதியில் சில்லரை மற்றும் மொத்த விற்பனையாக மதுபானங்கள் விற்க அனுமதி பெற்றுள்ள கடைகள் திறந்து இருக்கும்.
ஆனால், மேற்குறிப்பிடப்பட்டுள்ள வார இறுதி நாட்களில், விடுமுறைக்கு முந்தைய நாள் மற்றும் விடுமுறை நாட்களில் மட்டும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை மதுபானங்கள் அங்கு விற்பனை செய்யப்படும்.
வியாபார நோக்கத்திற்காக சேமித்து வைத்திருக்கும், ரெஸ்ட்டாரன்ட், ஹோட்டல், பப்ஸ், காபி ஷாப்புகளுக்கும் மதுபானம் விற்பனை மற்றும் அருந்துவதற்கான தடை நீடிக்கும்.
ஆனால், மது அருந்துவது அவர்களது கட்டிடங்களுக்குள்ளேயே நடக்கவேண்டும். இது 240 விற்பனை கூடங்களுக்கு பொருந்தும்.
இப்பகுதிகளில் முன்பு மதியம் 2 மணியிலிருந்து இரவு 11 மணிவரை இயக்கப்பட்ட பேருந்துகள், இனி மதியம் 2 மணியிலிருந்து இரவு 9 மணி வரை மட்டும் இயக்கப்படும். இப்பகுதிக்கான படகு போக்குவரத்து வரும் ஞாயிறு முதல் இயக்கப்படும். இப்பகுதியில் போலீஸ் பாதுகாப்புகள் பலப்படுத்தப்படும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications