சென்னை மருத்துவமனை ஐசியூ வுக்காக அமெரிக்காவில் 60 ஆயிரம் டாலர்கள் திரட்டிய ‘ஐந்திணை’!
டல்லாஸ்(யு.எஸ்) சென்னைக்கு அருகே திருவேற்காட்டில் ஏழை எளிவர்களின் வசதிக்காக கட்டப்பட்டுள்ள மருத்துவமனை ஐசியூ பிரிவு மெஷின்கள் வாங்குவதற்காக 60 ஆயிரம் டாலர்கள் நிதியுதவி அளிக்கப்பட்டது.
ஐந்தை திரட்டிய 75 ஆயிரம் டாலர்கள்
சாஸ்தா தமிழ் அறக்கட்டளை யின் சார்பில் 6 வது ஆண்டு நிதி திரட்டும் நிகழ்ச்சியாக ' ஐந்தை' என்னும் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் மூலம் 75 ஆயிரம் டாலர்கள் நிதி திரட்டப்பட்டு 60 ஆயிரம் டாலர்கள் சென்னை உதவும் கரங்கள் அமைப்பு மூலம் நடத்தப்படும் மருத்துவமனை
ஐசியூ கட்டமைப்புக்காக வழங்கப் பட்டது.
10 ஆம் ஆண்டு திருக்குறள் போட்டிக்காக 10 சதவீதத் தொகையாக 7 ஆயிரத்து ஐநூறு டாலர்கள் கொடுக்கப்பட்டது, அரங்கம், செட் ப்ராப்பர்ட்டீஸ் உட்பட நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்காக 7ஆயிரத்து ஐநூறு டாலர்கள் செலவாகியுள்ளதாக அறக்கட்டளையினர் தெரிவித்தனர்.
அது என்ன ஐந்தை?
5ஐ என்று பெயரிடப்பட்ட நிகழ்ச்சியை ஐந்தை என்றே அழைத்தனர். அது என்ன ஐந்தை என்று கேட்டவர்களுக்கு ஐந்திணைகளை விவரிக்கும் வகையில் நாட்டியங்கள் அமைத்து இருப்பதால் ஐந்தை என்று பெயர் சூட்டியதாக கூறினார்கள்.
திணை என்றால் ஒழுக்கம் என்று பொருள்படுகிறது. ஐந்திணைகள் என்றால் ஐவகை நிலங்களின் பின்னணியில், அங்கே வசித்து வந்த மக்களின் ஐந்து வகை உணர்வுகளை க் குறிப்பிடுவதாகும்.
ஐந்து வித உணர்வுகளும் ஒருங்கே இணைந்து மக்கள் கடைப்பிடித்த ஒழுக்க நெறிகளையும் குறிப்பிடுகிறது.
ஐவகை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நடனங்கள்
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களுடைய உணர்வுகளான அகத்திணையை நினைவுகூறும் வகையில் நடனங்கள் இடம் பெற்றது. காதல், காத்திருத்தல், ஊடல், இரங்கல், விரக்தி என அந்தந்த மன நிலைக்கு ஏற்றவாறு, பழங்காலத்தில் நடனங்கள் இருந்ததாக இலக்கியங்கள் கூறுகின்றன.
அதன் அடிப்படையில் திணைகளுக்கு ஏற்றவாறு நடனங்கள் அமைத்ததாக நிகழ்ச்சி
வடிவமைப்பாளர் கல்பனா ரவிசங்கர் தெரிவித்தார்.
அசத்தல் செட் ப்ராப்பர்ட்டீஸ்
ஒவ்வொரு நில அமைப்பிற்க்கும் ஏற்றார் போல் செட் வடிவமைத்து இருந்தனர். காளி கோவில், கடற்கரை, மலை அடிவாரம் என காட்சி அமைப்பை மாற்றிக்கொண்டே இருந்தனர். உடன் திறம்பட்ட லைட்டிங் எஃபெக்ட்ஸ் கூடுதல் அம்சமாக இருந்தது. 4D என்ற புதிய கருத்தாக்கத்தில், நிஜ உணர்வை கொண்டுவரும் முயற்சியும் வலு சேர்த்தது.
சங்க இலக்கிய குறிப்புகளைக் கொண்டு பிரத்தியேகமாக எழுதி, இசையமைத்து பதிவு செய்யப்பட்ட புத்தம் புதிய தமிழ் இசைப்பாடல்களை நிகழ்ச்சியில் அரங்கேற்றினார்கள். டாக்டர் ரகுராமன் எழுதிய பாடலகளுக்கு வானதி ரகுராமன் இசையமைத்துள்ளார்.
அமெரிக்காவுக்கும் வந்து விட்ட வில்லுப்பாட்டு
முதலில் வில்லுப்பாடு மூலம் ஐந்திணைகளையும் கதை, பாடல்கள் பாடி விவரித்தார்கள். பெரியவர்களுடன் , அமெரிக்காவில் பிறந்த 12 ம் வகுப்பு படிக்கும் மாணவரும் மாணவியும் பங்கேற்று வில்லுப்பாட்டுக்கு கதை சொல்லி பாடியது வியப்பாக இருந்தது.
நகைச்சுவையாகவும் நயமாகவும் தமிழரின் தொன்மைக்கலையை அந்நிய மண்ணில் அரங்கேற்றியது பாராட்டுக்குரியதாகும் அமெரிக்கா முழுவதும் இந்த வில்லுப்பாட்டு குழுவினர் தனி நிகழ்ச்சி நடத்த ஆரம்பித்தால் ஆச்சரியமில்லை.
நடன மங்கைகளின் நாட்டிய விருந்து பெரும்பான்மையாக பெண்களும் சிறுமிகளும் பங்கேற்ற பல்வேறு நடனக்க்குழுக்களில் 80க்கும் மேற்பட்டோர் இடம் பெற்றிருந்தனர். ஒவ்வொரு நிலத்திற்கும் மூன்று விதமான நடனங்கள் இடம் பெற்றது. வழக்கமாக இடம் பெறும் சிலம்பாட்டமும் நடனத்துடன் இணைந்து வந்தது. நாட்டுப்புற நடனப்பிரிவில் மீனவர்கள் நடனமும், கும்மி நடனமும் கலகலப்பூட்டின.
வண்ண வண்ண உடைகள் நிகழ்ச்சியை கலர்ஃபுல்லாக்கின. எங்கிருந்து தான் இந்த உடைகளை தருவிக்கிறார்களோ, நன்றாக தெரிந்த நண்பர்களுக்கே, மேடையில் அடையாளம் காண்பது சிரமாக இருந்தது. தமிழ் சினிமாவுக்கு தேவையான காஸ்ட்யூம்கள் அமெரிக்காவிலேயே கிடைக்கும் போலிருக்கிறது.
சிறப்பு விருந்தினர் டாக்டர் பத்மினி
நலிந்தவர்களுக்காக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு பணிகளை செய்து வரும் ஹூஸ்டனைச் சார்ந்த டாக்டர் பத்மினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் உதவும் கரங்கள் அமெரிக்கப் பிரிவுக்கு தலைவராகவும் இருக்கிறார். நடிகரும், நந்தா படத் தயாரிப்பாளருமான ராஜன் ராதாகிருஷ்ணன் டாக்டர் பத்மினியை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். மருத்துவமனை ஐசியூவுக்காக அறக்கட்டளை சார்பாக 60 ஆயிரம் டாலர் நிதியுதவியை வேலுராமன் விசாலாட்சி வழங்க டாக்டர் பத்மினி பெற்றுக்கொண்டார்.
தன்னார்வத் தொண்டர்களின் அயராத உழைப்பு
5ஐ நிகழ்ச்சி வடிவமைப்பு, பாடல்கள் தேர்வு, நடன அமைப்பு , பயிற்சி என அனைத்துப் பணிகளையும் ஈஸ்வர் நாட்டியாலயாவின் கல்பனா ரவிசங்கர் ஏற்றிருந்தார். பரத நாட்டியத்தில் பட்ட மேற்படிப்பு (M.F.A) பயின்றவர். கல்பனாவுக்கு உறுதுணையாக ஹேமா ஞானவேல் உடன் பணியாற்றினார்.
வினோத் திட்ட மேலாண்மையை கவனித்துக் கொண்டார். மற்றும் அருண் குமார், அருண் பொன்னுசாமி, ராதிகா, ஸ்ரீராம், வெங்கடேசன், முத்தையா, அண்ணாமலை, உமா, ரம்யா, ராஜி பிரபாகர், கிருஷ்ணராஜ் உள்ளிட்டவர்கள் பல்வேறு குழுக்களை வழி நடத்தி வெவ்வேறு பணிகளை மேற்கொண்டனர். கவிதை நடையில் மோனி வரவேற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியை ரம்யா தொகுத்து வழங்கினார். வேலு ராமன் விசாலாட்சி நன்றியுரை ஆற்றினர்.
-இர தினகர், டல்லாஸிலிருந்து...