சத்யா நாதெல்லா ஒரு நல்ல தலைவர்.. ஸ்டீவ் பாமர் பாராட்டு
நியூயார்க்: தான் ஒரு நல்ல லீடர் என்பதை நிரூபித்தவர் சத்யா நடெல்லா. அருமையான தொழில்நுட்ப அறிவு, சிறந்த வர்த்தக கண்ணோட்டம் கொண்டவர் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரான ஸ்டீவ் பாமர், புதிய சிஇஓ சத்யா நடெல்லாவுக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டீவ் , மைக்ரோசாப்ட் ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள இமெயில் செய்தியில், சத்யா நடெல்லாவை புதிய தலைமை செயலதிரியாக அறிவித்துள்ள இன்றைய தினம் மிகவும் அற்புதமானது. மாபெரும் தலைமை செயலதிகாரியாக சத்யா திகழ்வார். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எதிர்காலத்தை அவர் பிரகாசப்படுத்துவார் என்று பெருமையோடு நம்புகிறேன்.
தான் ஒரு நல்ல தலைமைத்துவக் குணம் கொண்டவர் என்பதை நிரூபித்தவர் சத்யா நடெல்லா.

சிறந்த தொழில்நுட்ப அறிவும், சிறந்த வர்த்தக கண்ணோட்டமும் கொண்டவர். சந்தை நிலவரத்தை துல்லியமாக அறிந்து வைத்திருப்பவர் அவர். வாய்ப்புகள் என்ன என்பதை அறிந்து வைத்திருப்பவர். எப்படி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதை அறிந்து வைத்திருப்பவர்.
பல வருடம் நான் சத்யா நடெல்லாவுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன். அவரது திறமையை பலமுறை நேரில் பார்த்து வியந்துள்ளேன். அவரது தலைமையில் இந்தப் புதிய குழு மிகச் சிறப்பாக செயல்படும் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.
மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்கள் அனைவரும் சத்யாவின் தலைமையில் ஒருங்கிணைந்து தொலை நோக்குப் பார்வையுடன் புதிய உத்வேகத்துடன் செயல்பட வேண்டும்.
உலக நிறுவனங்களில் மிகச் சிறந்த ஒன்றாக மைக்ரோசாப்ட் திகழ்கிறது. இந்த நிறுவனத்தை நான் மிகவும் நேசிக்கிறேன். இங்குள்ள ஊழியர்களை நேசிக்கிறேன். அவர்களின் துணிச்சலான செயல்பாடுகளை நேசிக்கிறேன். அனைவரும் இணைந்து செயல்படும் பாங்கை நேசிக்கிறேன். நமது பரந்து விரிந்த வாடிக்கையாளர்களை நேசிக்கிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அலுவலகத்தின் அமைதியை, பணியாற்றும் திறமையை நேசிக்கிறேன் என்று கூறியுள்ளார் பாமர்.
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு அடுத்து அந்த நிறுவனத்தின் தலைமை செயலதிகாரி பொறுப்புக்கு வந்தவர் பாமர். தற்போது 3வது சிஇஓவாக பொறுப்பேற்றுள்ளார் சத்யா என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications