ஷாக்.. "ஹஜ் புனித யாத்திரை சென்ற 64 இந்தியர்கள் திடீர் மரணம்.." கடும் வெயில் காரணம்!
சவுதி: இந்தாண்டு ஹஜ் புனித யாத்திரைக்குச் சவுதி சென்றவர்களில் 645 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் சுமார் 68 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. அதீத வெப்பம் தொடங்கி பல்வேறு காரணங்களால் இந்த மரணங்கள் நடந்துள்ளன. இதுபோன்ற மரணங்களைக் குறைக்கச் சவுதி அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இஸ்லாமியர்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல வேண்டும் என விரும்புவார்கள். இது இஸ்லாத்தின் கடைமைகளில் ஒன்றாகவே இருக்கிறது.

நமது நாட்டில் இஸ்லாமியர்கள் இந்த புனித யாத்திரைக்குச் செல்ல உதவிகளையும் செய்து வருகிறது. அதேநேரம் அங்குச் செல்லும் இஸ்லாமியர்கள் பல்வேறு காரணங்களால் உயிரிழப்பதும் தொடர்ந்து நடந்தே வருகிறது.
645 பேர் மரணம்: அதன்படி இந்தாண்டு சவுதி சென்ற இஸ்லாமியர்களில் 645 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அவர்களில் 68 பேர் இந்தியர்கள் என்றும் சவுதி அரேபியாவில் உள்ள தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இது தொடர்பாகப் பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி மேலும் கூறுகையில், "இந்தாண்டு ஹஜ் யாத்திரை சென்றவர்களில் சுமார் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்.. இவர்கள் உயிரிழப்பிற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. புனித யாத்திரை வந்த வயதானவர்கள் சிலர் உயிரிழந்துள்ளனர். அதேபோல அதீத வெப்பத்தால் சிலர் உயிரிழந்து இருக்கலாம் என்று கருதுகிறோம்" என்றார்.
இந்தியர்கள்: இஸ்லாமியர்கள் அனைவரும் ஹஜ் புனித பயணம் செல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஹஜ் புனித பயணத்திற்குச் செல்வார்கள். இந்தாண்டும் பல லட்சம் பேர் ஹஜ் யாத்திரை வந்த நிலையில், இதுவரை 645 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 323 பேர் எகிப்து நாட்டை சேர்ந்தவர்கள் ஆவர். அதேபோல 60 ஜோர்டான் நாட்டை சேர்ந்தவர்கள். இந்தியாவைச் சேர்ந்த 68 பேர் ஹஜ் யாத்திரையின் போது உயிரிழந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
எந்த நாடுகள்: இந்தோனேசியா, ஈரான், செனகல், துனிசியா மற்றும் ஈராக் நாடுகளைச் சேர்ந்தவர்களும் உயிரிழந்துள்ளனர். இருப்பினும், இந்த உயிரிழப்புகள் தொடர்பாகச் சவுதி அதிகாரப்பூர்வமாக எந்தவொரு தகவலையும் அறிவிக்கவில்லை. இருந்த போதிலும் அந்நாட்டு அதிகாரி சுமார் 650 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் எனக் கூறுகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் அதீத வானிலை உள்ளிட்ட நிகழ்வுகளால் இதுபோன்ற மரணங்கள் ஏற்படும் என்ற போதிலும், இந்தாண்டு பாதிப்பு அதிகமாக இல்லை என்றே அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். சவுதியில் வெப்பம் அதிகரித்து வரும் போதிலும், அந்நாட்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால் மரணம் கணிசமாகக் குறைந்துள்ளது. கடந்த பல ஆண்டுகளாகச் சவுதி அரேபியாவில் கோடை வெப்பத்தால் ஏற்படும் பாதிப்பும் மரணங்களும் தொடர்ந்து குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.
என்ன செய்யலாம்: அதீத வெப்பம் நிலவும் போது முடிந்த வரை நிழலான பகுதிகளில் இருக்க வேண்டும். நேரடியாக வெயிலில் செல்வதைத் தடுக்க வேண்டும். தண்ணீரை அதிகமாகக் குடிக்க வேண்டும். இதுபோன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தால் பாதிப்புகளைத் தடுக்கலாம். மேலும், வெளியே செல்ல திட்டமிடும் முன்பு அன்றைய தினம் வானிலை எப்படி இருக்கிறது என்பதையும் செக் செய்து அதற்கேற்ப திட்டமிட வேண்டும்.












Click it and Unblock the Notifications