சவுதியில் கொலையாளி இந்தியர், ஹெராயின் கடத்திய பாகிஸ்தானியர் தலை துண்டிப்பு
ரியாத்: சவுதி அரபியாவில் கொலை குற்றம் செய்த இந்தியர் மற்றும் போதைப்பொருள் கடத்திய பாகிஸ்தானியர் ஆகியோரின் தலை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுதி அரபியாவில் வேலை செய்து வந்தவர் இந்தியரான விஜய் குமார் சலீம். அவருக்கும், அவருடன் வேலை பார்த்து வந்த ஏமன் நாட்டைச் சேர்ந்தவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சலீம் கோடாரியால் அந்த ஏமன் நாட்டவரின் தலையில் வெட்டினார். இதில் அந்த நபர் பலியானார். இந்த வழக்கை விசாரித்த சவுதி நீதிமன்றம் சலீமுக்கு மரண தண்டனை விதித்தது.

இதையடுத்து ரியாத் நகரில் வைத்து வியாழக்கிழமை சலீமின் தலை துண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. மேலும் ஹெராயின் போதைப் பொருள் கடத்திய பாகிஸ்தானியரான ஹபீஸ் விஃபாக் ரசூல் ஷாவுக்கும் வியாழக்கிழமை மதினா நகரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்த ஆண்டில் நேற்றைய தண்டனைகளையும் சேர்த்து மொத்தம் 34 பேர் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளனர். சவுதியில் போதைப் பொருள் கடத்தல், பலாத்காரம், கொலை, மத நிந்தனை ஆகிய குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
சவுதியில் கடந்த ஆண்டு 87 பேரும், அதற்கு முந்தைய ஆண்டு 78 பேரும் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications