சவுதியில் 7 வயது சிறுமியை அடித்துக் கொன்ற மாற்றாந்தாய் தலை துண்டித்து கொலை
ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் தனது கணவரின் 7 வயது மகளை அடித்துக் கொன்ற பர்மாவைச் சேர்ந்த பெண் பொது இடத்தில் வைத்து தலை துண்டிக்கப்பட்டுள்ளார்.
பர்மாவைச் சேர்ந்தவர் லைலா பின் அப்துல் முத்தலிப் பாசிம். சவுதி அரேபியாவின் மக்கா நகரில் வசித்து வந்த அவர் ஏற்கனவே திருமணமாகி 7 வயது பெண் குழந்தை உள்ள ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் லைலா அந்த சிறுமியை துடைப்பத்தால் அடித்துக் கொலை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லையும் கொடுத்தார் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து அவருக்கு சவுதி சட்டப்படி மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவரை மெக்கா நகரின் தெருவில் இழுத்துச் சென்று வாளால் தலையை துண்டித்து தண்டனையை நிறைவேற்றியுள்ளனர். தெருவில் இழுத்துச் செல்கையில் நான் கொலை செய்யவில்லை என்று லைலா மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளார்.
லைலாவை கொல்லும் வீடியோ முதலில் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த வீடியோ கொடூரமாக இருந்ததால் அதை யூடியூப் நிர்வாகம் நீக்கவிட்டது.
சவுதியில் 2015ம் ஆண்டில் வெறும் 2 வாரங்களில் மொத்தம் 10 பேர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சவுதியில் அளிக்கப்படும் இந்த தண்டனைக்கு பிற நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றபோதிலும் தலை துண்டிப்புகள் நடக்கத் தான் செய்கின்றன.