இந்தியர்களுக்கு ஜாக்பாட்.. சவுதி அரேபியா தந்த குட்நியூஸ்.. தொழிலாளர் சட்ட விதியில் அதிரடி மாற்றம்
ரியாத்: நம் நாட்டில் இருந்து ஏராளமானவர்கள் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு செல்கின்றனர். இந்நிலையில் தான் சவுதி அரேபியாவில் புதிய தொழிலாளர் சட்டம் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்து சவுதி அரேபியாவில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சாதகமாக அமைய உள்ளது.
நம் நாட்டில் இருந்து ஏராளமானவர்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்கின்றனர். இதில் சவுதி அரேபியாவும் அடங்கும். இந்த நாட்டுக்கு நர்சிங் மற்றும் வீட்டு வேலை, டிரைவர் பணிகளுக்கு ஏராளமான இந்தியர்கள் இலங்கை மக்கள் சென்று வருகின்றனர்.

இவர்களுக்கு அதிக பணிப்பளு இருக்கும் என்று சொல்லப்படுகிறது. விடுப்பு வழங்காமல் தினமும் 18 மணி நேரம் வரை பணி செய்ய கட்டாயப்படுத்துவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.
மேலும் இதுதொடர்பாக சவுதி அரசுக்கும் புகார்கள் சென்றன. இதனால் தொழிலாளர்களின் உரிமையை பாதுகாப்பது மற்றும் அவர்களுக்கான சிறந்த பணிச்சூழலை ஏற்படுத்தும் வகையில் சவுதி அரேபியாவில் தொழிலாளர் சட்டத்தில் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. கடந்த 2020ம் ஆண்டு முதல் இந்த தொழிலாளர் சட்டத்தில் சீர்த்திருத்தம் என்பது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இப்போது தொழிலாளர் சட்டத்தில் உள்ள விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குட்நியூஸாக பார்க்கப்படுகிறது. சவுதி அரேபியாவில் இந்தியர்கள் ஏராளமானவர்கள் பணி செய்து வரும் நிலையில் அவர்களுக்கு இது பலனளிக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக பெண்கள் அதிகமாக பலன் பெற உள்ளனர். இந்த புதிய விதிகள் இந்த மாதம் முதல்நடைமுறைக்கு வந்துள்ளது.
இதுதொடர்பாக Gulf News வெளியிட்டுள்ள செய்தியில், புதிய விதியின்படி பெண் பணியாளர்களுக்கு 12 வாரம் மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது. இதற்கு முன்பு 10 வாரம் மகப்பேறு விடுப்பு வழங்கப்பட்டது. தற்போது கூடுதலாக 2 வாரம் மகப்பேறு விடுமுறை வழங்கப்படுகிறது. இதன்மூலம் குழந்தைகளுடன் கூடுதல் நேரத்தை பெண்கள் செலவிட முடியும்.
அதேபோல் சவுதியில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் கணவர், மனைவி இறந்துவிட்டால் சம்பளத்துடன் கூடிய 5 நாள் விடுமுறை விடப்படும். அதேபோல் திருமணத்துக்கும் சம்பளத்துடன் கூடிய 5 நாள் விடுமுறை வழங்கப்பட உள்ளது. ஒருவேளை பணி பிடிக்காமல் வேலையை விட்டு நிற்க விரும்பினால் 30 நாட்கள் நோட்டீஸ் பிரியட்டாக பணியாற்ற வேண்டும். மாறாக நிறுவனத்தில் இருந்து நீக்கம் செய்யப்பட்டால் 60 நாள் நோட்டீஸ் பிரியட்டாக பணியாற்ற வேண்டும்.
அதேபோல் அரசு விடுமுறை மற்றும் ரம்ஜான் பண்டிகை நாட்களில் பணியாற்றும்போது அது ‛ஓவர்டைம்' பணி என்று கணக்கில் கொள்ளப்படுகிறது. இதனால் கூடுதல் சம்பளம் பெற வேண்டும். அதேபோல் Trial Period என்பது 180 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இனம், நிறம், பாலினம், மாற்றுத்திறன், சமூக நிலை உள்ளிட்டவற்றை காரணம் காட்டி பாகுபாடு காட்டக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிகளால் சவுதி அரேபியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பெரிய பலன் அளிக்கும். குறிப்பாக இந்திய புலம்பெயர் பெண்கள், ஆண்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.
இருப்பினும் கூட நாம் ஒன்றை மறந்து விடக்கூடாது. சவுதி அரேபியாவில் ஏற்கனவே தொழிலாளர்களுக்கான சட்டங்கள் அமலில் உள்ளன. அந்த சட்டத்தின்படி ஒரு நாளைக்கு 10 மணிநேரம் மட்டுமே பணி என்ற நிலை உள்ளது. ஆனால் இந்த சட்டத்தை யாரும் பின்பற்றுவது இல்லை. குறிப்பாக வீட்டு வேலைக்கு செல்வோர் ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வரை கட்டாய பணியில் அமர்த்தப்படுகின்றனர்.
இதனால் என்ன தான் சவுதி அரசு தொழிலாளர்களுக்கு சாதகமாக சட்டங்களை கொண்டு வந்தாலும் கூட அதனை முறைப்படி யாரும் கடைப்பிடிப்பது இல்லை. இதனால் இந்த புதிய சட்டத்தையாவது, அனைவரையும் கடைப்பிடிக்க வைக்க சவுதி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் சட்டத்தின் பலன் அப்படியே புலம் பெயர் தொழிலாளர்களுக்கு கிடைக்கும். இல்லாவிட்டால் ஏட்டளவில் மட்டுமே சட்டம் செயல்பாட்டில் இருக்கும். நடைமுறைக்கு சாத்தியப்படாது என்கின்றனர் அங்குள்ள தொழிலாளர்கள்.












Click it and Unblock the Notifications