சவுதி: வெளிநாட்டுக்கு சென்று தீவிரவாதிகளுடன் சேர்ந்த 6 பேருக்கு சிறை
ரியாத்: வெளிநாட்டுக்கு சென்று போராளிகளுடன் சேர்ந்து போராடிய குற்றத்திற்காக 6 பேருக்கு சவுதி நீதிமன்றம் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் சேர்ந்து போராட பல்வேறு நாட்டினர் அங்கு செல்கின்றனர். இந்நிலையில் வெளிநாட்டுக்கு சென்று போராளிகளுடன் சேர்ந்து போராடியது. மன்னரின் கட்டளைக்கு கீழ்படியாதது உள்ளிட்ட குற்றங்களுக்காக சவுதியைச் சேர்ந்த 6 பேருக்கு அந்நாட்டு சிறப்பு நீதிமன்றம் 6 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்துள்ளது.
மேலும் அந்த 6 பேரும் தண்டனை காலம் முடிந்து விடுதலையான பிறகு குறிப்பிட்ட காலத்திற்கு வெளிநாடுகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுக்கு சென்று போராடுபவர்களுக்கு 3 முதல் 20 ஆண்டுகள் சிறை, அரசால் தீவிரவாதிகள் என்று அறிவிக்கப்பட்ட தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு உதவினால் 5 முதல் 30 ஆண்டுகள் சிறை என்று சவுதி மன்னர் அப்துல்லா கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்திருந்தார்.
அல் கொய்தா, ஐஎஸ்ஐஎஸ், நுஸ்ரா முன்னணி, ஹிஸ்புல்லா மற்றும் ஏமனைச் சேர்ந்த ஹவ்தி அமைப்பு ஆகியவை சவுதி அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகள் ஆகும்.
வெளிநாட்டுக்கு சென்று போராடிய குற்றத்திற்காக கடந்த மாதம் சுமார் 12 பேர் சவுதியில் கைது செய்யப்பட்டனர். 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சவுதியைச் சேர்ந்தவர்கள் வெளிநாடுகளில் தீவிரவாதிகளுடன் சேர்ந்து போராடிக் கொண்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதில் பெரும்பாலானவர்கள் சிரியாவில் இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications