கால் நூற்றாண்டுக்குப் பின் ஈராக்கில் தூதரகத்தை மீண்டும் திறந்தது செளதி அரேபியா
பாக்தாத்: கால்நூற்றாண்டுக்குப் பின்னர் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் தமது தூதரகத்தை செளதி அரேபியா நேற்று திறந்துள்ளது.
1990ஆம் ஆண்டு ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் குவைத் மீது படையெத்து ஆக்கிரமித்துக் கொண்டார். இதற்கு செளதி அரேபியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. குவைத்தைத் தொடர்ந்து தங்கள் நாட்டையும் சதாம் உசேன் ஆக்கிரமித்துவிடுவாரோ என்ற அச்சம் அந்நாட்டுக்கு இருந்தது.

அப்போது ஈராக்குக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகளின் யுத்தத்தில் செளதி அரேபியா முக்கிய பங்கு வகித்தது. செளதி அரேபியாவில் இருந்துதான் அமெரிக்கா தலைமையிலான சர்வதேச நாடுகள் யுத்தத்தை நடத்தின.
இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையேயான உறவில் கடும் விரிசல் ஏற்பட்டது. பின்னர் ஈராக்கில் அமெரிக்கா களம் இறங்கிய நிலையில் இருநாடுகளிடையே உறவு புதுப்பிக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக இந்த உறவு மேம்பட்டது.
இதன் பின்னர் செளதி அரேபியாவில் ஈராக் தூதரகம் திறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செளதி அரேபியா தூதரக அதிகாரிகளுக்கு கடந்த செப்டம்பரில் ஈராக் விசா வழங்கியது.
தற்போது கால் நூற்றாண்டுக்குப் பின்னர் ஈராக்கில் செளதி அரேபியா தனது தூதரகத்தைத் திறந்துள்ளது. முதல் கட்டமாக செளதி அரேபிய தூதரக அதிகாரிகள் 35 பேர் கொண்ட குழு பாக்தாத் சென்றுள்ளது.
பாக்தாத்தைத் தொடர்ந்து குர்திஷ்தான் மாகாணத்தின் எர்பில் நகரிலும் செளதி அரேபியாவின் தூதரகம் திறக்கப்பட இருக்கிறது.












Click it and Unblock the Notifications