சவுதி ராணுவ தலைமையில் பெரும் மாற்றம்.. மன்னர் அதிரடி
துபாய்: சவுதி அரேபியாவின் ராணுவ தளபதி அப்துல் ரஹ்மான் பின் சலே அல் பன்யான் அப்பதவியில் இருந்து மன்னரால் நீக்கப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவின் ராணுவ தளபதியாக பதவி வகித்தவர் அப்துல் ரஹ்மான் பின் சலே அல் பன்யான். இவர் சவுதி மன்னர் சல்மானால், சேவையில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக, சவுதி அரேபியாவின் செய்தி ஏஜென்சியான, எஸ்.பி.ஏ செய்தி வெளியிட்டுள்ளது.

இவருக்கு பதிலாக புதிய ராணுவ தளபதியாக ஃபய்யாத் அல் ருவாலி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல ராணுவத்தின், தரைப்படை மற்றும் விமானப்படை தலைவர்களையும் மன்னர் மாற்றியுள்ளார். அதேநேரம், இதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை.
ஈரான் ஆதரவு அல் ஹுதி புரட்சி படையினருடனான சண்டை தொடங்கி 3 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2015 முதல் அல் ஹுதி படையினருக்கு எதிரான போரில் ஏமன் அரசுக்கு சவுதி படைகள் ஆதரவாக உள்ளன.
சவுதியின் முடி இளவரசர் அதாவது மன்னரின் அடுத்த வாரிசான முகமது பின் சல்மான்தான், சவுதியின் பாதுகாப்பு துறை அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.
முடி இளவரசர் முகமது பின் சல்மான் கடந்த சில மாதங்களாகவே சவுதியின் பொருளாதாரம், சமூக அளவில் பல மாற்றங்களை செய்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக இந்த மாற்றங்களும் இருக்கலாம் என கூறப்படுகிறது. இளம் தலைமுறையினரை முக்கிய பதவிகள் அமர்த்துவதில் சவுதி அரசு சமீபகாலமாக மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications