போஸ்னிய படுகொலை நினைவு தினம்: செர்பிய பிரதமர் மீது மக்கள் கல்வீச்சு
ஸ்ரெப்ரெனிகா: 1995ம் ஆண்டு ஸ்ரெப்ரெனிகா நகரில் ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் கொல்லப்பட்டதன் 20ம் ஆண்டு நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செர்பிய பிரதமர் அலெக்டாண்டர் வுசிக் மீது மக்கள் கற்களை வீசியதால் அவர் அங்கிருந்து ஓடிவிட்டார்.
போஸ்னிய போரின்போது 1995ம் ஆண்டு ஜுலை மாதம் போஸ்னியா-ஹெர்சிகோவ்னியாவில் உள்ள ஸ்ரெப்ரெனிகா நகரில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் செர்பிய வீரர்களால் படுகொலை செய்யப்பட்டனர். இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நடந்த பயங்கர படுகொலை இது தான் என்று கூறப்படுகிறது.

இந்த படுகொலை சம்பவம் நடந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் செர்பிய பிரதமர் அலெக்சாண்டர் வுசிக் ஸ்ரெப்ரெனிகா நகரில் உள்ள நினைவிடத்திற்கு சென்று படுகொலை செய்யப்பட்டவர்களுக்காக மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அப்போது அங்கு கூடியிருந்த மக்கள் அல்லாஹு அக்பர் என்று கூறி அலெக்சாண்டர் மீது கற்களை வீசினர். இதையடுத்து அவர் தனது பாதுகாவலர்களின் உதவியோடு அங்கிருந்து சென்றுவிட்டார். மக்கள் வீசிய கற்களில் ஒன்று அலெக்சாண்டரின் தலையில் பட்டு அவரது மூக்கு கண்ணாடி உடைந்தது.
1992ம் ஆண்டு முதல் 1995ம் ஆண்டு வரை நடந்த போஸ்னிய போரில் 1 லட்சம் மக்கள் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications