பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராமாக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு
பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்த நிலையில் அந்த நாட்டின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்த நிலையில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் இன்று அந்த நாட்டின் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து கூட்டணி கட்சிகள் கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றன.
பெரும்பான்மையை இழந்த அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பை ஏப்ரல் 3 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டது.

நாடாளுமன்ற கலைப்பு
ஆனால் இம்ரான் கான், நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என அதிபர் ஆரிப் ஆல்வியிடம் பரிந்துரை செய்தார். அதன்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்த நிலையில் துணை சபாநாயகரின் முடிவை எதிர்த்து அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை கடந்த 7ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என்றும் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

நாடாளுமன்றம் கூடியது
இந்த நிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்றம் கூடியது. இம்ரான் கானின் ஆதரவாளரான சபாநாயகர் ஆசாத் குவாஸிம் வாக்கெடுப்பை நடத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர் அவையை ஒத்தி வைத்தார். பின்னர் நள்ளிரவில் சபாநாயகர் பதவியை ஆசாத் குவாசிம் ராஜினாமா செய்தார்.

174 எம்பிக்கள்
எதிர்க்கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியைச் சேர்ந்த அயாஸ் சாதிக் அவைக்கு தலைமை வகித்து வாக்கெடுப்பை நடத்தினார். தீர்மானத்தின் மீது 174 எம்பிக்களின் ஆதரவு இருந்ததை அடுத்து இம்ரான் கான் அரசு கவிழ்ந்தது. பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்பட 11 எதிர்க்கட்சிகள் இம்ரான் கானுக்கு கைகோர்த்துள்ளன.

பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி
எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் நாடாளுமன்றச் செயலாளரிடம் முறைப்படி நேற்று மனு தாக்கல் செய்தார். இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி சார்பில் அதன் துணைத் தலைவர் மெகமூத் குரேஷியும் மனுதாக்கல் செய்துள்ளார்.

புதிய பிரதமர் தேர்வு
பாகிஸ்தானின் புதிய பிரதமரை தேர்வு செய்ய அந்த நாட்டு நாடாளுமன்றம் இன்று கூடியது. இதில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆட்சியமைக்க தேவையான எம்பிக்களின் ஆதரவு இருப்பதால் ஷெபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். இம்ரான்கான் கட்சியைச் சேர்ந்த யாரும் நாடாளுமன்றத்தில் இல்லாத நிலையில் எதிர்கட்சி உறுப்பினர்கள் யாரும் இல்லாமல் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications