இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனா கைது? 6 மாத சிறை தண்டனை விதித்த வங்கதேச நீதிமன்றம்!
டாக்கா: வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆறு மாதச் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. அவருக்கு எதற்காக இந்தத் தண்டனை வழங்கப்படும்.. அவர் இப்போது இந்தியாவில் இருக்கும் நிலையில், அவர் கைது செய்யப்படுவாரா என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. இதில் வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து அவர் பாதுகாப்பு கருதி, வங்கதேசத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். இதற்கிடையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

6 மாதங்கள் சிறை
வங்கதேசத்தில் உள்ள சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைவர் நீதிபதி முகமது கோலாம் மோர்டுசா மஜும்தார் தலைமையிலான மூன்று பேர் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.. ஹசீனா கைது செய்யப்பட்ட நாளிலிருந்தோ அல்லது அவர் சரணடைந்த நாளிலிருந்தோ இந்த தண்டனை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹசீனா மட்டுமின்றி வங்கதேசத்தில் உள்ள காய்பந்தா மாவட்டத்தைச் சேர்ந்த ஷகில் அகந்த் புல்பூல் என்பவருக்கும் இதே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இரண்டு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. புல்பூல் டாக்காவைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். அவர் ஷசீனாவின் அவாமி லீக்கின் மாணவர் பிரிவான வங்கதேச சத்ரா லீக் (BCL) உடன் தொடர்புடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிரட்டல்
ஷேக் ஹசீனாவுக்கும், ஷகில் அகந்த் புல்பூலுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றதாகக் கூறப்படும் தொலைப்பேசி உரையாடல் கசிந்த நிலையில், அதன் அடிப்படையில் இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. அந்த ஆடியோவில் ஒரு பெண்ணின் குரல், "எனக்கு எதிராக 227 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.. எனவே 227 பேரைக் கொல்ல எனக்கு உரிமம் கிடைத்துள்ளது" என்று கூறுவது கேட்கிறது. அந்தக் குரல் ஹசீனாவுடையது.. அவரே இதுபோல மிரட்டினார் என்பது புகாராகும்.
அவாமி லீக்
இதுபோல மிரட்டல் விடுப்பது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று அரசு வழக்கறிஞர் வாதிட்டார். ஏனெனில் இது நீதித்துறை நடவடிக்கைகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. மேலும் வங்கதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த மக்கள் போராட்டம் தொடர்பான விசாரணைகளில் சம்பந்தப்பட்டவர்களை அச்சுறுத்தவே இதுபோல பேசியுள்ளார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து அவருக்கு 6 மாதச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
வங்கதேச பிரதமராகவும் அவாமி லீக் கட்சியின் தலைவராகவும் இருந்த ஷேக் ஹசீனா 11 மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன் பிறகு ஹசீனாவுக்கு எதிராகப் பல்வேறு வழக்குகள் வங்கதேசத்தில் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அவர் வழக்கு ஒன்றில் தண்டிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.
கைது செய்யப்படுவாரா?
அதேநேரம் ஹசீனா இப்போது வங்கதேசத்தில் இல்லை. அவர் கடந்தாண்டே இந்தியாவில் தஞ்சம் புகுந்துவிட்டார். லண்டன் செல்லும் முயற்சிகள் தோல்வி அடைந்த நிலையில், அவர் இந்தியிலேயே பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். அதேநேரம் அவர் சரியாக எங்கு இருக்கிறார் என்பது குறித்த தகவல்கள் இல்லை. இப்போது அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள போதிலும், அவரை கைது செய்ய வாய்ப்பில்லை. இதன் காரணமாகவே அவர் சரணடைந்த நாளிலிருந்தோ இந்தத் தண்டனை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications