முயலைத் திருடி கொடுமைப்படுத்தி கொடூரமாகக் கொன்று தொங்க விட்ட திருடர்கள்!
துர்ஹாம், இங்கிலாந்து: இங்கிலாந்தின் துர்ஹாமில், திருடர்கள் சிலர் ஒரு வீட்டுக்குள் புகுந்து அந்த வீட்டுப் பெண் வளர்த்து வந்த முயலைத் திருடினர். பின்னர் அதை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்றனர். இதை வீடியோவாக்கி இன்டர்நெட்டிலும் போட்டு குரூர புத்தியைக் காட்டியுள்ளநர்.
இந்த வீடியோவைப் பார்த்த அந்தப் பெண் மனம் உடைந்து போய் விட்டார். அவரது பெயர் ரிபெக்கா அட்கின்ஸ்டன். இவர் பெர்சி என்ற முயலை ஆசை ஆசையாக வளர்த்து வந்தார். சமீபத்தில் இது காணாமல் போய் விட்டது.
முயல் எங்கே போனது என்று தெரியாமல் கவலையில் இருந்து வந்தார் ரிபெக்கா. இந்த நிலையில் இன்டர்நெட்டில் தற்செயலாக ஒரு வீடியோவை அவர் பார்க்க நேர்ந்தது. அதைப் பார்த்த ரிபெக்கா உறைந்து போனார். காரணம், பெர்சி அந்த வீடியோவில் இருந்ததுதான்.
முயல் காணாமல் போன சில மணி நேரங்களில் இந்த வீடியோவை அப்லோட் செய்துள்ளனர். அந்த வீடியோவில் 3 இளைஞர்கள் உள்ளனர். அனைவரும் பாத்ரூமில் குளிக்கிறார்கள். அவர்களது கையில் முயல் உள்ளது. மூன்று பேரும் சேர்ந்து முயலை சித்திரவதை செய்கின்றனர். பின்னர் கொலை செய்து ஜன்னல் வழியாக தூக்கிப் போடுகின்றனர்.
இந்தக் காட்சி ரிபெக்கா குடும்பத்தினரை அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது. இறந்த முயலுக்கு பிறந்து 11 நாளே ஆன ஐந்து குட்டிகள் உள்ளன. அவை தற்போது தாயை இழந்து தவித்து வருகின்றனவாம். பெர்சி கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டதால் இந்தக் குட்டிகளை ரிபெக்கா குடும்பத்தினர் மிகவும் கவனத்துடன் பார்த்து வருகின்றனராம்.
இந்த வீடியோ தற்போது வைரல் போல பரவியுள்ளது. இந்த வீடியோவைப் பார்த்து பலர் லைக் போட்டுள்ளதுதான் பெரும் கொடுமையாகும்.