சிங்கப்பூரின் தந்தை லீயின் உடல் அடக்கம் செய்யப்பட்டது: மோடி உள்பட 23 தலைவர்கள் பங்கேற்பு
சிங்கப்பூர்: சிங்கப்பூரின் தந்தை லீ குவான் யூவின் உடல் அரசு மரியாதையுடன் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
சிங்கப்பூரின் தந்தை என்று அழைக்கப்பட்ட லீ குவான் யூவ் நிமோனியாவால் கடந்த 23ம் தேதி மரணம் அடைந்தார். 91 வயதில் மரணம் அடைந்த அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெற்றது. லீயின் உடல் நாடாளுமன்ற கட்டிடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு லட்சக் கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.

லீயின் உடலுக்கு பிரதமர் மோடி, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் உள்ளிட்ட உலகத் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இன்று மதியம் 1 மணி அளவில் லீயின் உடல் அரசு மரியாதையுடன் மாண்டாய் மயானத்திற்கு ஊர்வலகமாக எடுத்துச் செல்லப்பட்டது. அப்போது விமானப்படையைச் சேர்ந்த 5 ஜெட் விமானங்கள் வானில் அணிவகுத்தன. மேலும் லீயின் உடல் வைக்கப்பட்ட வாகனத்திற்கு முன்பு மோட்டார் சைக்கிள்களில் வீரர்கள் சென்றனர்.

லீயின் இறுதி ஊர்வலம் நடந்தபோது கன மழை பெய்தது. மழையையும் பொருட்படுத்தாது லட்சக்கணக்கான மக்கள் லீக்கு மரியாதை செலுத்தும் வகையில் சாலையோரம் திரண்டனர். மாண்டாய் மயானத்தில் லீயின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
லீயின் இறுதிச் சடங்கில் மோடி, பில் கிளிண்டன், இந்தோனேசியா அதிபர் ஜோகோ விடோடோ, ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட், இங்கிலாந்து நாடாளுமன்ற செயலாளர் வில்லியம் கக் உள்பட 23 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர்.

லீயின் இறுதிச் சடங்கையொட்டி சிங்கப்பூரில் கடைகள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன. மேலும் ரயில் சேவையும் நிறுத்தி வைக்கப்பட்டது.
லீயின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள மோடி இன்று காலை விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள்: கணேசன் துரைப்பாண்டி.












Click it and Unblock the Notifications